Saturday 20 June 2009

மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீரா?

பெண்களை அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மேம்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அவசியம் என்பதனை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதன் அடிப்படையில் 1996 ல் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இப்போது 13 ஆண்டுகள் ஆகியும் அது நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குறிய விஷயம் தான். இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை வழங்குவதில் ஏதாவதொரு முட்டுக்கட்டை அவ்வப்போது எழும். 1928 ல் பாலிய விவாகத்தை தடுக்கும் பொருட்டு, பெண்களுக்கு திருமண வயது 14 என்றும், ஆண்களுக்கு திருமண வயது 18 எனவும் தீர்மானிக்கப்பட்ட சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தன. பழமைவாதிகளின் தலையீட்டால், பெண்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் பாதி கிணறு கூட தாண்டாத நிலை தான் இன்றும் இந்தியாவில் நிலவுகிறது. இந்தியாவில் இதுவரை 15 பாராளுமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. 1952 ல் தான் பெண்கள் வாக்களிக்கக் கூடிய உரிமையை பெற்றார்கள். ஆனால் பிரிட்டனில் 1918 மற்றும் 1925ம் ஆண்டுகளில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்கள் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 1922 ம் ஆண்டும், சுவிஸ் நாட்டில் 1971 ல் வாக்குரிமை வழங்கப்பட்டது. உலகத்தில் உள்ள வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் மத்தியில், பெண்களுக்கான சலுகைகளை வழங்குவதில் கூட நாம் பின்னோக்கி தான் உள்ளோம் என்பதையே இது காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து ஜெனிவாவில் உள்ள நாடாளுமன்ற ஒருங்கிணைந்த அமைப்பு, உலக வரைபடத்தில் பெண்கள் என்ற தலைப்பில், 186 நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய ஓர் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் படி இந்தியா, பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிப்பதில் 104 இடத்தில் உள்ளது. உலக நாடுகளில் பரந்து பட்ட ஜனநாயக முறை உள்ள நாடாக காட்சியளிக்கும் நம் நாட்டின் இந்த நிலையை நினைத்து நாம் வெட்கப்படத் தான் வேண்டும். ருவாண்டா நாடு 48.8 சதவீதம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கி முதல் இடத்தில் உள்ளது என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். கடந்த ஆண்டும் இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது கடும் எதிர்ப்பு நிலவியது. 33 சதவீதம் பெண்களுக்கு தேவை தானா?. 10 முதல் 15 சதவீதம் வரை மட்டும் வழங்கலாமா?. வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாமா? அல்லது வழங்கக்கூடாதா?. நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதா? அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திய பிறகே ஒதுக்கீடு வழங்கலாமா? என்ற விவாதங்கள், யோசனைகள் எழுந்ததே தவிர தீர்வு எட்டப்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா குறித்து உறுதிமொழி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த பாராளுமன்றத்திலேயே மசோதாவை நிறைவேற்றும் என்றும், ஒரு நாள் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி ஆணித்தரமாக கூறியுள்ளார். ஆனால் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதத்தை தற்போதுள்ளவாறு அறிவித்தால், பாராளுமன்றத்திலேயே விஷம் குடிப்பேன் என்று ஐக்கிய ஜனதாதள கட்சித்தலைவர் சரத் யாதவ் அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் இந்த மசோதாவை தாக்கல் செய்யவிட மாட்டோம் என்று சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் கூக்குரலிடுகின்றன. இதே கருத்தை தமிழகத்தில் உள்ள சில கட்சிகளும் வலியுறுத்துகின்றன. இவர்களின் கோரிக்கை என்னவோ நியாயமானது தான். மகளிர் மசோதாவை அப்படியே அமுல்படுத்தினால், அதாவது எந்தவித உள்ஒதுக்கீடும் இல்லாமல் 33 சதவீத இடஒதுக்கீடு பொதுவாக அளிக்கப்பட்டால், ஒரு கோடி ரூபாய் நகைகளை அள்ளி எடுத்துக் கொண்டு, சுங்கவரி ஏய்த்து இந்தியாவுக்குள் நுழைந்த, தொழிலதிபர் மபத்லாலின் மனைவி போன்று, கொழுத்த பணமுதலைகள் தங்கள் மனைவிமார்களை அரசியல்களத்தில் நிறுத்தி, பின்னிருந்து இயக்கும் பினாமிகளாக செயல்படுவார்கள் என்ற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறியது போன்ற கதையாய், இந்திய ஜனநாயகம், பெருமுதலாளிகளின் கையில் சிக்கிக் கொண்டு, நாடு மறுகாலனி ஆகும் நிலை கூட ஏற்படலாம். ஆனால் இவற்றை பற்றி எல்லாம் சிந்திக்க இப்போது நேரமில்லை. பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, பின்னர் உள்ஒதுக்கீடு போன்ற திருத்தங்கள் கொண்டு வருவதே சிறப்பானதாக அமையும். தேர்தலில் பெருமுதலாளிகளின் பினாமியாக இருக்கும் மனைவிமார்களுக்கு சீட் வழங்குவதா? அல்லது விவசாய தொழிலாளியின் மனைவிக்கா அல்லது சகோதரிக்கா? என்பதை கட்சிகள் தான் முடிவு செய்யவேண்டும். அப்படி செய்தாலே உள் ஒதுக்கீடு என்ற பேச்சே எழாது. பாராளுமன்றத்தில் தற்போது உள்ள 543 இடங்களில் 33 சதவீதம் பெண்களுக்கு கொடுத்தால் 178 இடங்கள் மகளிர் வசம் சென்று விடும். இதனால் 543 எம்.பி., க்களின் எண்ணிக்கையுடன், பெண்களுக்கான 33 சதவீதத்தையும், அதாவது 178 இடங்களையும் சேர்த்து 721 இடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் சில அறிவு ஜீவிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால், தங்களுடைய அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதிக் கொள்ள வேண்டும் என்ற பயத்தில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கதறுகின்றனர். இவர்களே, மேற்கண்டவாறு பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், பெண்களை தோற்கடிப்பது சிரமம் என்ற காரணத்தினால் 20 சதவீதம் மட்டும் கொடுத்தால் போதும் என்று வரிந்து கட்டி பேசுகின்றனர். இன்னும் சிலர் இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், மக்களவைத் தலைவர் மீராகுமார், டெல்லி முதல்வர்ஷீலா தீட்சித், மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை உதாரணம் காட்டி பெண்கள் இந்தியாவில் உயர்ந்த இடத்தில் உள்ளனர் என்று கூறுகின்றனர். நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பெண் சமுதாயத்திற்கு இது போதுமானதாக உள்ளதா?. அடித்தட்டில் உள்ள பெண்கள் நாட்டின் நிர்வாகத்தில் பங்கெடுப்பது தான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். இந்த மசோதா தற்போது சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. மசோதா நிறைவேற்றுவது குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ராஜீவ்காந்தி வழிவகுத்தார். அதை 50 சதமாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் 33 சதவீதத்தை 15 அல்லது 20 சதவீதமாக குறைக்கப்டுவதை ஏற்க முடியாது என்று சோனியாகாந்தி அறிவித்துள்ளார். இது மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாராளுமன்றத்திலேயே 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
- பி.என்.எஸ்.பாண்டியன், புதுச்சேரி

சோலை கட்டுரை

சீன - இந்திய அரசுகளின் மேலாதிக்க போட்டியினால் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள்: மூத்த ஊடகவியலாளர் சோலை
[வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 05:53 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
சீனாவினதும் இந்தியாவினதும் மேலாதிக்கப் போட்டியினால் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள் என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளர் சோலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை இதழான குமுதம் ரிப்போட்டருக்கு அவர் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தவரையில் நமது வெளிநாட்டுக் கொள்கை நடு நாயகமாக இருந்தது. அதனைத் தங்கள் திசைக்கு இழுக்க அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எடுத்த முயற்சிகள் முனை மழுங்கிப் போயின.
தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு அதன் மண்ணின் மைந்தர்களையே இரும்புக் கால்களால் நசுக்கி தாண்டவம் ஆடியது. அங்கே நசுக்கப்பட்ட மக்களுக்காக பண்டிட் ஜவகர்லால் நேரு குரல் கொடுத்தார். அதன் பின்னர் அன்னை இந்திரா குரல் கொடுத்தார். அங்கே இனப் படுகொலைக்கு எதிராக இந்தியா எழுந்து நின்றது.
அமைதி வழியில் போராடி தங்கள் உரிமைகளைப் பெற முடியவில்லை என்ற நிலை வந்த போதுதான் சிங்கள தேசத்தில் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். அன்னை இந்திராவும் அமரர் எம்.ஜி.ஆரும் இருந்த வரை அவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தனர். கலைஞரும் கரம் கொடுத்தார்.
தனி ஈழம் மலர்ந்தால் இந்தியாவில் தமிழ்நாடும் தனி நாடாகும் என்று சிங்கள அதிபர்கள் காட்டிய பூச்சாண்டியை இந்திரா நம்பவில்லை. ஆனால், அவருக்குப் பின்னே வந்த அவருடைய மைந்தன் ராஜீவ் காந்தி நம்பினார்.
அதன் விளைவாக, ஈழம் பற்றிய இந்திய அரசின் பார்வை திசை மாறியது. போராளிகளை ஒடுக்க இந்திய இராணுவம் ஈழத்தில் இறங்கியது. ஆனால் சோதனைகளைத்தான் சந்தித்தது. அழைத்த இராணுவத்தை சிங்கள அரசே "சீக்கிரம் வெளியேறு" என்றது. காரணம், இந்திய இராணுவத்தால் பிரபாகரனைக் கூட பிடிக்க முடியவில்லையே என்று சிங்கள இனவாதம் சீற்றம் கொண்டது.
சிங்களம் ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே இனம் - ஒரே மதம் என்ற அவர்களுடைய சித்தாந்தம் சிதையத் தொடங்கியது. ஆகவே, அவர்கள் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்கள். ஈழ மக்களின் விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்கு அவர்கள் கஜானாவைக் காலி செய்து ஆயுதங்கள் வாங்கிக் குவித்தனர். சீனமும், பாகிஸ்தானும் உதவ முன்வந்தன.
கூர்ந்து பார்த்தால் இந்துமாக்கடல் பிரதேசத்தில் தனது செல்வாக்கை, -ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனம் தொடர்ந்து முயன்று வருவது தெரியும். இந்தியாவிற்கு எதிராக ஒரு பக்கம் பாகிஸ்தானுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது என்றும் பாகிஸ்தான் இந்தியாவின் பகை நாடாகவே இருக்க வேண்டும் என்பது அதன் லட்சியம்.
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் முறையில் சீனத்து எல்லையிலிருந்து அந்த காஷ்மீரத்துக் கானகங்களுக்குள் விரிவான சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இப்போது இலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. எனவே, ஈழ மக்களின் நியாயத்தை உணர்ந்தாலும் அவர்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்க சிங்கள அரசிற்கு ஆயுத சேவை செய்கிறது.
இந்தியா என்ன செய்கிறது? இலங்கை சீனத்தின் செல்லப்பிள்ளையாகி விடக்கூடாது என்பதற்காக ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க எல்லா வழிகளிலும் உதவி செய்கிறது.
ஈழத் தமிழர்களும் இங்கே தாய்த் தமிழக மக்களும் இரத்த உறவுகள் என்பதனை இந்திய அரசு மறந்துவிட்டது. ஈழம் மயானமானாலும் தொடர் குண்டு வீச்சுக்களால் தமிழ் இனம் அழிந்தாலும் தப்பிப் பிழைத்த அரும்புகளையாவது காக்க வேண்டும் என்ற உணர்வு தமிழகத்தில் தலைதூக்கி நிற்கிறது. அங்கே பனை மரங்கள் கூட பஸ்பமாகிவிட்டாலும் அதன் சாம்பலில் பிறக்கும் புதிய ஜீவன்கள் நெருப்பின் புதல்வர்களாக எழுந்து வருவார்கள்.
ஆனால், சிங்கள இனவாதத்திற்கு சீனத்திற்குப் போட்டியாக தாமும் உதவி செய்வதில்தான் இந்திய அரசு துடிப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் சீனத்தின் செல்வாக்கையாவது கட்டுப்படுத்த முடிந்ததா? இன்றைக்கு இலங்கையில் சீனம் இரண்டு கப்பற்படைத் தளங்களை அமைத்து வருகிறது.
இருபெரும் நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் சுண்டைக்காய் இலங்கை நன்றாகவே சுகம் கண்டு வருகிறது.
இறுதிப் போர் என்று அண்மையில் சிங்கள இராணுவம் ஈழத்தின் மிச்ச மீதங்களைக் கூட பாஸ்பரஸ் குண்டுகளால் எரித்தது. இதனை உலகமே கண்டித்தது. ஆனால் சீனமும் கண்டிக்கவில்லை. இந்தியாவும் கண்டுகொள்ளவில்லை.
ஐ.நா.மன்றத்தில் சிங்கள அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவும் சீனமும் சிங்கள அரசிற்குத் துணையாக நின்றன. மனித இனப்படுகொலைகளைக் கண்டிக்க மறுத்தன. அந்தக் கொடுமையை உள்நாட்டுப் பிரச்சினை என்று இரத்தத் திரையிட்டு மறைத்தன.
இன்றைக்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது யார்? நடைமுறையில் சீனம்தானா? அதனால்தான் இந்தியா அநியாயங்களுக்குத் துணை போகிறதா?
நமக்கு அண்மையிலுள்ள மியான்மர் (பர்மா) கடந்த முப்பது ஆண்டுகளாக இராணுவ சர்வாதிகாரத்தின் கோரக்கரங்களில் துடித்துக் கொண்டிருக்கிறது. இராணுவ ஆட்சியைத் தூக்கி எறிய மியான்மரின் இளைய தலைமுறை போராடுகிறது. மியான்மரின் தந்தை அவுங்சானின் புதல்வி சூயிகி பத்தாண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைபட்டிருக்கிறார்.
இந்திரா காந்தி ஆட்சிக்காலம் வரை மியான்மர் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா கரம் உயர்த்தியது. மியான்மர் மாணவர்கள் சுதந்திரமாக டெல்லித் தலைநகரில் தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறி வந்தனர். இந்திய எல்லைக்குள் மியான்மர் மக்களின் விடுதலை இயக்க முகாம்கள் விடிவெள்ளிகளாகப் பூத்திருந்தன.
இந்தியா எந்த இராணுவ ஆட்சியையும் ஆதரித்ததில்லை. ஆனால், காலப்போக்கில் மியான்மரின் இராணுவ ஆட்சியை ஆதரிக்க ஆரம்பித்தோம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கிரீடம் சூட்டப்பட்ட இந்தியா, மியான்மர் மக்களின் ஜனநாயகப் போராட்டப் பாதையை அடைத்தது. டெல்லியில் கேட்டுக் கொண்டிருந்த விடுதலை கீதம் கெடுதலை ஓலமாகக் கருதப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மியான்மர் இராணுவ ஆட்சியோடு மன்மோகன் சிங் அரசு நேசம் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? மியான்மர் சீனத்தின் செல்வாக்கு வட்டத்திற்குள் முடங்கி விடக் கூடாது என்று கருதுகிறது. வெற்றி பெற்றதா? இல்லை.
இன்றைக்கு தென்னிந்தியாவை நோக்கி மியான்மர் தீவில் சீனம் கப்பற் படைத்தளம் அமைத்தே விட்டது.
ஆம். மியான்மர் இராணுவ ஆட்சிக்கு ஒரு பக்கம் சீனா ஆதரவு தருகிறது. இன்னொரு பக்கம் இந்தியா தோள் கொடுக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க இராணுவத் தளங்களை எதிர்த்து ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் இன்ன பிற நாடுகள் போராடின. தங்கள் மண்ணில் அத்தகைய தளங்களுக்கு இடமில்லை. ஏனெனில், அணுகுண்டுகள் மீது தலை வைத்துத் தங்களால் தூங்க முடியாது என்று அந்த நாடுகள் அறிவித்தன. அந்த நாடுகளின் போராட்டங்களுக்கு சீனம் ஆதரவு அளித்தது. ஆனால், இன்றைக்கு அதே சீனம் இலங்கையிலும் மியான்மரிலும் தனது கப்பற் படைத்தளங்களை அமைத்து வருகிறது.
இன்றைய சீனத் தலைமையின் போக்கு புரியாத புதிராக இருக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்திற்கு வெடிகுண்டுப் பற்களைக் கட்டிக் கொடுத்ததில் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, சீனத்திற்கும் பங்கு உண்டு.
இலங்கையிலும் மியான்மரிலும் சீனம் செல்வாக்குப் பெறுவது தமது நலன்களுக்கு எதிரானது என்று கருதியே இந்திய அரசு ஈழ இனப் படுகொலையையும் மியான்மர் இராணுவ ஆட்சியையும் ஆதரித்து மவுன சாட்சியாக நிற்கிறது. இதே காரணத்திற்காக இப்போது நேபாள அரசியலையும் இந்தியா குழப்புகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மன்னராட்சிக்கு முடிவு கட்ட நேபாள மக்கள் பல்லாண்டுகளாக மாவோயிஸ்டுகள் தலைமையில் போராடினார்கள். அப்போதெல்லாம் ஒரு பக்கம் சீனமும் இன்னொரு பக்கம் இந்தியாவும் மன்னராட்சிக்குத்தான் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தன.
நேபாளத்திலும் எண்ணற்ற கட்சிகள். இரண்டொன்றைத் தவிர எல்லாமே அரண்மனை வாசலில்தான் பாடம் படித்துக் கொண்டிருந்தன. மாவோயிஸ்டுகள் தலைநகரையும் கைப்பற்றுவர் அரண்மனையையும் மியூசியம் ஆக்குவர் என்ற நிலை வந்த போதுதான் அந்தக் கட்சிகள் புரட்சிக்கு ஆதரவளித்தன. புரட்சியில் மட்டுமல்ல; அடுத்து வந்த தேர்தலிலும் மாவோயிஸ்டுகள் மகத்தான வெற்றி பெற்றனர். கூட்டணி அரசு அமைந்தது.
புஷ்பகமல் தகால் என்ற பெயர் கொண்ட மாவோயிஸ்டு தலைவர் பிரசண்டா பிரதமரானார். ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டத்தை அவர் செயல்படுத்தத் தொடங்கினார். பிரச்சினைகள் எழுந்தன. மன்னராட்சிக்கு விசுவாசமாக இருந்த இராணுவத் தளபதியை மாற்ற முயன்றார். அந்தத் தளபதியோ ஏற்கெனவே ஓய்வு பெற்று வீட்டிற்குப் போய் விட்ட இராணுவ அதிகாரிகளை மீண்டும் பதவியில் அமர்த்தினார். அதற்காகச் சொல்லப்பட்ட காரணம், இராணுவத்தை பிரசண்டா தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பதுதான்.
பிரசண்டா பதவி விலகினார். இல்லை. நிர்ப்பந்திக்கப்பட்டார். பிரதமராகும் வரை அவரை அங்கீகரிக்காத சீனம் அவரை அங்கீகரித்தது. அதற்காக அவர் சீனத்தின் பக்கம் சாய்ந்துவிடவில்லை. ஆனால் அப்படிச் சாய்கிறார் என்று இந்தியாவிற்குச் சந்தேகம் வந்தது. அதன் விளைவாகத்தான் அவர் பதவி விலகினார். அதனை அவரே பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இனி நேபாளத்திற்கு என்று அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அரசமைப்பு சபைக்கான தேர்தல் நடைபெற வேண்டும். அந்தத் தேர்தலில் நேபாளி காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதன் தலைவர் சி.பி.கொய்ராலா பிரதமராக வேண்டும். இதுதான் இந்தியாவின் விருப்பம் என்று அண்மையில் நமது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியதை இங்கே நினைவுகூர வேண்டும்.
அப்படி ஓர் நிலை வந்தால் என்ன நடைபெறும்? மீண்டும் மன்னராட்சி சிம்மாசனம் ஏறும். பெயரளவில் நாடாளுமன்றமும் நகர்ந்து கொண்டிருக்கும். ஏனெனில், கொய்ராலாக்கள் அரண்மனையின் கொல்லைப்புறத்திலிருந்தே ஆட்சி செய்து அனுபவப்பட்டவர்கள்.
பொதுவாக, சீனமும் இந்தியாவும் அண்டை நாடுகள் மீது மேலாதிக்கம் செலுத்த போட்டி போடுகின்றன என்ற கருத்து உருவாகி வருகிறது. அந்தப் போட்டியில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள். மியான்மரே இராணுவ முகாமாக உருமாறி இருக்கிறது. நேபாளத்தில் வாக்குப்பெட்டி மூலமே 40 சதவிகித மக்களின் ஆதரவைப் பெற்ற மாவோயிஸ்டுகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சரித்திரத்தின் மீது இரத்தத் துளிகளைத் தெளிக்கிறார்கள். பார்ப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
_nandri.. புதினம்.com

Monday 18 May 2009

புதுச்சேரியில் சாதி அரசியலுக்கு சம்மட்டி அடி; காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் வேலை செய்த முன்னாள் முதல்வர் ரங்கசாமியை மக்கள் புறந்தள்ளினர்

புதுச்சேரி பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட நாராயணசாமிக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிரசாரம் செய்யவில்லை. 3 முறை நாராயணசாமி வீடேறிச் சென்று கூப்பிட்டும் கூட ரங்கசாமி வரவில்லை. காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் பேசியும், ரங்கசாமி காங்கிரசுக்காக தேர்தல் வேலை பார்க்கவில்லை. சபாநாயகர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் வல்சராஜ் ஆகியோர் எவ்வளவோ சொல்லியும் ரங்கசாமி, காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் நடந்த கம்பன் விழாவில் பேசிய ரங்கசாமி, இங்கு பல நீதிபதிகள் வந்துள்ளனர். இங்கு நடைபெறும் பட்டிமன்ற விவாதங்களின் முடிவில் சரியான தீர்ப்பு வழங்குவார்கள். இது போன்று நடைபெற உள்ள தேர்தலில் புதுச்சேரி மக்களும் நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று பரபரப்பாக பேசினார். அப்போதே ரங்கசாமி, பா.ம.க., வை ஆதரிக்கத் தொடங்கி விட்டார் என்பது தெளிவாகி விட்டது. இதனிடையே வாக்குபதிவுக்கு 2 நாட்கள் முன்பே ரங்கசாமி திடீரென வெளியூர் கிளம்பிச் சென்றுவிட்டார். அவர் ஊருக்கு கிளம்பும் போது, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திராநகர் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்தனர். யாருக்கு ஓட்டு போடுவது என்று கேட்டனர். அப்போது அவர்களிடம் இது என்ன சீசன்? என்று ரங்கசாமி கேட்டார். இது மாம்பழ சீசன் என்று சொன்னார்கள். ஆம். புரிந்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டாராம். இதன் பின்பு அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று, தலைவர் வெளியூர் சென்று விட்டார். உங்களை மாம்பழத்திற்கு ஓட்டு போடச் சொன்னார் என்றுச் சொல்லி விட்டு ரங்கசாமி- மாம்பழம் படம் பொறித்த நோட்டீசுகளை விநியோகித்துச் சென்றனர். ரங்கசாமியின் ஆதரவாளரான உழவர்கரை நகராட்சித் தலைவர் என்.எஸ்.ஜெயபால், சோப் ஆயில் சம்பத் ஆகியோர் தலைமையிலான ஒரு குழு கிராமம் கிராமமாகச் சென்று, காங்கிரஸ் மற்றும் தி.மு.க., வில் உள்ள ரங்கசாமியின் ஆதரவாளர்களை கவனித்து மாம்பழத்திற்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்க்கவேண்டும் என்று உத்தரவிட்டுச் சென்றது. இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவி ராஜவதனி மாம்பழத்திற்கு மாறி விட்டார். ஏரிப்பாக்கம் ராமகிருஷ்ணன் என்பவரும் எதிராக வேலை செய்தார். வில்லியனு£ரில் முன்னாள் அமைச்சர் ஆனந்த பாஸ்கரன் ஆதரவாளர்கள் காங்கிரசுக்கு மறைமுகமாக வேலை பார்த்ததாக சொல்லப்படுகிறது. உருளையன்பேட்டைத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஓம்சக்தி ரமேஷ் காங்கிரசுக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தார். இதே போன்று முதலியார்பேட்டைத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தனது ஆதரவாளர்களை கடைசி நேரத்தில் மாம்பழத்திற்கு வேலை பார்க்க ரகசியமாக வாய்மொழி உத்தரவிட்டார். அவர்களும் முருங்கப்பாக்கத்தில் தங்கள் வேலைகளை காண்பித்தனர். இதைப்போன்று எதிர்கட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவாக செயல்பட்டவர்களை காங்கிரஸ் மேலிடம் கண்டறிந்துள்ளது. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. தி.மு.க., வில் உள்ள ரங்கசாமியின் ஆதரவாளரான கிராமப்பகுதியைச் சேர்ந்த கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் மாம்பழத்திற்கு ஓட்டுப் போடச் சொல்லி தொகுதி முழுவதும் வலம் வந்தாராம். மண்ணாடிப்பட்டுத் தொகுதியைச் சேர்ந்த வக்கீல் ஒருவரும், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த வக்கீல் ஒருவரும் பா.ம.க., விற்கு ஆதரவாக செயல்பட்டனர். இருவரும் தி.மு.க., வில் பொறுப்பில் உள்ளவர்கள். இதுபோன்று காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வில் உள்ள தமது ஆதரவாளர்களை ஜாதியை காரணம் காட்டி தன்பக்கம் இழுத்து பா.ம.க., வுக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்க்க வைத்த ரங்கசாமிக்கு தேர்தல் முடிவு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. விலைவாசி உயர்வு, இலங்கைப்போர், புதுச்சேரி அரசு மீது அதிருப்தி ஆகியவற்றின் காரணமாக நாராயணசாமி வெற்றி பெற மாட்டார் என்றும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்காது என்றும் தப்புக்கணக்கு போட்ட ரங்கசாமி, காங்கிரசுக்கு எதிராக வேலை பார்த்தார். இப்போது எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. காங்கிரஸ் வேட்பாளர் வே.நாராயணசாமி 91 ஆயிரத்து 772 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றி மூலம் புதுச்சேரி மக்கள் சாதி அரசியலுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளார்கள் என்பது தெளிவாகியுள்ளது. பா.ம.க., வை வெற்றி பெறச் செய்ய யாரும் விரும்பவில்லை. ரங்கசாமி, தான் மட்டுமே புத்திசாலி என்று நினைத்து, காங்கிரஸ் வேட்பாளரையோ, முதல்வரையோ, அமைச்சர்களையோ தனது தொகுதிக்கு பிரசாரத்திற்கு வரவேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு கடைசியில் காலை வாரிவிட்டுச் சென்று விட்டார். ஆனால், அந்த தொகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வே.பெத்தபெருமாள் தீவிரமாக காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அவரது ஆதரவாளர்களுடன் புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளிலும் தெருத் தெருவாகச் சென்று ஓட்டு வேட்டையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரங்கசாமியின் நிலை காங்கிரஸ் கட்சியில் கேள்விக்குறியாகி விட்டது. அவரை ஆதரித்து பேச முக்கிய நிர்வாகிகள் யாரும் கட்சியில் இல்லை. அவர் விரைவில் அவரது ஆதரவாளர்களுடன் பா.ம.க., வில் இணையலாம் அல்லது புதுச்சேரி காமராஜ் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்போதைய நிலையில் அவர் காங்கிரசை விட்டுச் செல்ல மாட்டார். அமைதியாக இருப்பார். திருவண்ணாமலை, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள சாமியார்களை சந்திக்கச் செல்வார், டென்னிஸ் விளையாடிக் கொண்டு பொழுதைக் கழிப்பார் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள், அவரை சும்மா இருக்க விடுவார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

Wednesday 8 April 2009

புதுச்சேரி பார்லிமென்ட் தேர்தல் காங்கிரஸ் தீவிர பிரச்சாரம். மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவு அலை

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் மத்திய அமைச்சர் வே.நாராயணசாமியை ஆதரித்து காங்கிரஸ்-தி.மு.க தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணியில் புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்படாத வேட்பாளராக மத்திய மந்திரி வே.நாராயணசாமி கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவுத் திரட்டி வருகிறார். முன்னாள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தும் ஆதரவுக் கேட்டார். கட்சியினர் மத்தியில் நாராயணசாமி தான் வேட்பாளர் என்று பேசப்படுகிறது. கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியனும், நாராயணசாமியின் வெற்றிக்கு பாடுபடும் படி தொண்டர்களுக்கு உத்தரவிட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். வில்லியனு£ர், மண்ணாடிப்பட்டுத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கூடுதல் வாக்குகள் பெற அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பில் அந்த தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாகூர், ஏம்பலம் தொகுதிகளை அமைச்சர் கந்தசாமி பொறுப்பில் எடுத்துள்ளார். முதல்வர் வைத்திலிங்கம் நெட்டப்பாக்கம், திருபுவனை தொகுதிகளில் பொறுப்பாளர்களை நியமித்து நாராயணசாமியின் வெற்றிக்காக திட்டங்களை தீட்டி வருகிறார். சபாநாயகர் ராதாகிருஷ்ணனின் தொகுதியில் அவரது ஆதரவாளர்கள் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சோனியா, நாராயணசாமி, கைச்சின்னம் பொறித்த தொப்பிகளை அணிந்து தொகுதியை வலம் வரத் தொடங்கியுள்ளனர். அமைச்சர் ஷாஜகான், லாசுபேட்டை, காலாப்பட்டு, காமராஜர் நகர் தொகுதியில் ஊழியர் கூட்டங்களை நடத்தி முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தி.மு.க., வை பொறுத்த வரை மாநில அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, நமது வேட்பாளர் மத்திய அமைச்சர் நாராயணசாமி தான், அவரை வெற்றி பெற வைப்பது தான் நமது லட்சியம் என்று கூட்டங்களில் பேசி வருகிறார். விடுதலை சிறுத்தை தொண்டர்களும், காங்கிரசின் வெற்றிக்கு உழைக்கத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் இப்படி என்றால் காரைக்காலில் தொண்டர்கள் ஒரு படி மேலே சென்று நமது வேட்பாளர் நாராயணசாமி என்று அச்சிட்டு விளம்பரத் தட்டிகளை உருவாக்கி வருகின்றனர். காரைக்காலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் தி.மு.க., வினர் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். காரைக்கால் மாவட்ட தி.மு.க., அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான நாஜீம், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாராயணசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறி முக்கிய பிரமுகர்களை வீடு தேடிச் சென்று சந்தித்து பேசி பிரசாரம் செய்து வருகிறார்.

Thursday 26 March 2009

ராகுல் காந்தியை வரவேற்க வராத ரங்கசாமி, காங்கிரசுக்கு எதிராக புதிய இயக்கம் தொடங்க முடிவு?

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மாற்றம் நடந்தது. அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமிக்கு எதிராக ஒட்டு மொத்த அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் கட்சித்தலைமை முதல்வர் ரங்கசாமியை நீக்க முடிவு செய்தது. கட்சிக் கட்டளையின்படி ரங்கசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் வைத்திலிங்கம் முதல்வரானார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ரங்கசாமி அரசியலில் இருந்து ஒதுங்க தொடங்கினார். கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்தார். சட்டமன்ற கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் தனிக்கட்சித் தொடங்க வலியுறுத்தினர். ஆனால், எதிர்காலத்தை உணர்ந்து ரங்கசாமி அமைதி காத்து வருகிறார். தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் கோரிமேடு காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் டென்னிஸ் விளையாடுகிறார். விஷேச தினங்களில் சிவாலயங்களுக்குச் சென்று வருகிறார். சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி சித்தர் பீடத்திற்குச் சென்று வருகிறார். வீட்டில் இருந்தபடி மக்களை சந்திக்கவும் தவறவில்லை. இதனிடையே, ராகுல்காந்தி நேற்று புதுச்சேரி வந்தார். அவரை வரவேற்க கூட ரங்கசாமி வரவில்லை. இதுகுறித்து இன்று காலை டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த ரங்கசாமியிடம் கேட்டதற்கு, எதற்கும், எந்த காரணமும் இல்லை என்று திரும்ப,திரும்ப கூறினார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கட்சி மேலிடத்திற்கு பாடம் கற்பிக்க ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது பதவியை வலுக்கட்டாயமாக பறித்த கட்சி மேலிடத்திற்கு தனது பலத்தைக் காட்ட, காங்கிரசுக்கு எதிராக புதிய இயக்கம் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது. தன்னை பார்க்க வரும் ஆதரவாளர்களிடம் எல்லாம், ஒரு பத்து பொழுது பொறுத்திருங்கள். எல்லாத்தையும் பாத்துக்குவோம் என்று கூறி அனுப்பி வைக்கிறார்.

Tuesday 17 March 2009

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்த கடலு£ர் வாலிபர் ஆனந்த் புதுச்சேரி மருத்துவமனையில் உயிரிழந்தார்

கடலூர் அருகே உள்ள அன்னவள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகன் ஆனந்த் (வயது 23). விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர். கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் இலங்கை தமிழர்களுக்காக நேற்று முன்தினம் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனே சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பாட்டளிமக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, விடுதலைசிறுத்தை கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பேராசிரியர் ராமதாஸ் எம்.பி, கடலூர் தொகுதி எம்.எல்.ஏ அய்யப்பன், காட்டு மன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ரவிக்குமார், கடலூர் நகரசபை துணைத்தலைவர் தாமரைச்செல்வன், பெரியார் திராவிடர் கழக லோகு. அய்யப்பன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன் ஆகியோர் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த ஆனந்தை பார்த்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் ஆனந்த் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமால் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அவரது உடலுக்கு பழ.நெடுமாறன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்தினர். அன்னாரது உடல் கடலு£ருக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆனந்தனின் உடலைப்பார்த்து அவரது தங்கை ஆனந்தி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்ததது.

Friday 13 March 2009

9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி- ஒரு கண்ணோட்டம்

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கியதே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி ஆகும். பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு இந்திய குடியரசுடன் புதுச்சேரி இணைந்ததில் இருந்து 1963 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்திய பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. 30 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி. புதுச்சேரியில் இதுவரை நடந்துள்ள 13 பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 9 முறை வென்று சாதனை படைத்துள்ளது. வன்னியர், தாழ்த்தப்பட்டோர் மீனவர் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியின் தற்போதைய மொத்த வாக்காளர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 503 பேர் ஆவர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 63 ஆயிரத்து 898 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 605 பேரும் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். இதில் 18 வயதில் இருந்து 20 வயதுக்குள் உள்ளவர்கள் சுமார் 60 ஆயிரம் பேர். இவர்கள் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். புதுவையில் தற்போது முதல்வர் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியில் பா.ம.க. போட்டியிட்டது. பா.ம.க., சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ராமதாஸ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.,-பா.ஜ.க., வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை விட 60 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் பா.ம.க., வை புதுச்சேரி நகர பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாக்காளர்கள் காலை வாரினர். இருப்பினும் மாகி, ஏனாம் மற்றும் கிராமப்புற சட்டமன்ற தொகுதிகள் கைகொடுத்து வெற்றி மாங்கனியை பறிக்க உதவினர். இந்த முறை இங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்புகிறது. கூட்டணி எப்படி அமைந்தாலும் காங்கிரஸ் ஆளும் இங்கு காங்கிரஸ் கட்சியே போட்டியிடவேண்டும் என்று நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். இதற்கிடையே புதுவை எம்.பி. தொகுதியை கட்சி மேலிடத்திடம் கூறி காங்கிரஸ் கட்சியே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துவது என்று புதுவை காங்கிரசார் முடிவெடுத்தனர். அதன்படி புதுவை மாநில பொறுப்பாளராகிய குலாம்நபி ஆசாத்தை சந்தித்து வலியுறுத்த முதல்வர் வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோர் கடந்த 6-ந்தேதி டெல்லி சென்றனர். அவர்கள் 7-ந்தேதி குலாம்நபி ஆசாத்தை சந்தித்து பேசினார்கள். அப்போது இந்த முறை கண்டிப்பாக புதுச்சேரி எம்.பி. தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்களிடம் குலாம்நபி ஆசாத், தமிழகத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 5பேர் குழுவிடம் முறையிடும்படி கூறினார். இதைத்தொடர்ந்து அந்த குழுவிடம் புதுவை நிர்வாகிகள் புதுவை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த குழுவினர் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது புதுவை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது. இது இப்படி இருக்க, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்துடன் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியையும் சேர்த்து மொத்தம் 40 என்று கூறி, தொகுதி பங்கீடு செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ராமசாமி, புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பொறுத்தவரை கூட்டணியில் தனியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பதை விளக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு அமைத்து, துண்டு பிரசுரங்களை கொடுத்து தேர்தல் வேலைகளை துவக்கி விட்டார் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டால் வேட்பாளரும் இவரே தான். காரைக்கால் பகுதியை சேர்ந்த இவருக்கு கட்சியினர் மத்தியிலும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும் நல்ல மதிப்பு உள்ளது. சிறந்த படிப்பாளி. யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டார். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணமுடையவர். காரைக்காலில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மாகி, பள்ளுர், ஏனாம் ஆகிய தொகுதிகளில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளில் பதிவாகும் வாக்குகளில் 60 சதவீதம் காங்கிரசுக்கே சாதகமாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியை பெற தீவிரமாக முயன்று வருகிறது. வருகிற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடித்தால் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி சுலபமானது அல்ல. பா.ம.க., எம்.பி., ராமதாசும் மீண்டும் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளார். அ.தி.மு.க., வை பொறுத்தவரை மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பூத் கமிட்டிக்களை அமைத்து நிர்வாகிகளை நியமித்து பம்பரமாக சுழன்று தேர்தல் வேலைகளை செய்து வருகிறார். தி.மு.க., வை பொறுத்தவரை கட்சி மேலிடக் கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே. முன்னாள் அமைச்சர் ப.கண்ணணின் கட்சியான புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரசை பொறுத்தவரை மரியாதை தரும் கட்சியோடு மட்டும் தான் கூட்டணி வைப்பார்களாம். இதுபோன்ற நிலையில் எந்தக் கூட்டணியில் யாருக்கு சீட்டு என்பதை அறிய அனைத்து கட்சித் தொண்டர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.______________________________________________________

இதுவரை புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் ________________________________________
1963 கு.சிவப்பிரகாசம் (காங்கிரஸ்)
1967 என்.சேதுராமன் (காங்கிரஸ்)
1971 எஸ்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்)
1974 அரவிந்த பாலாபழனு£ர் (அ.தி.மு.க)
1977 அரவிந்த பாலாபழனு£ர் (அ.தி.மு.க)
1980 ப.சண்முகம் (காங்கிரஸ்)
1984 ப.சண்முகம் (காங்கிரஸ்)
1989 ப.சண்முகம் (காங்கிரஸ்)
1991 எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர் (காங்கிரஸ்)
1996 எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர் (காங்கிரஸ்)
1998 எஸ்.ஆறுமுகம் (தி.மு.க)
1999 எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர் (காங்கிரஸ்)
2004 மு.ராமதாஸ் (பா.ம.க)

Monday 9 March 2009

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து கடலு£ரில் கோயில்களுக்கு பூட்டு

கடலூர் அருகே உள்ள பெரியக்குப்பம் கடற்கரையில் மாசி மகத் திருவிழா மிகச்சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். மாசி மகத்தை முன்னிட்டு சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள கோவில்களில் 10 நாட்கள் விழா நடக்கும். நாள்தோறும் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், தெருக்கூத்து என கிராமமே களைகட்டி காணப்படும். இந்நிலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கையில் தமிழர்கள் நாள்தோறும் படுகொலை செய்யப்படுவதும், சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக்கப்பட்டு பட்டினி சாவுக்குள்ளாகி வருவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் நம் கடல் பகுதியில் மாசி மகத்திருவிழாவை கொண்டாடுவதா? எனவே இந்த ஆண்டு மாசி மகத்திருவிழாவை புறக்கணிக்க வேண்டும் என்பது குறித்து கிராமத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த இருவாரங்களுக்கு முன்னால் ஆலப்பாக்கம் கிராமத்தில் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியச்செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் 20 க்கும் மேற்பட்ட கிராமத்தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் போரை நிறுத்த வலியுறுத்தியும் மாசி மகத்திருவிழாவை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று ஆலப்பாக்கம், கீழ்புவாணிக்குப்பம், மேல்புவாணிக்குப்பம், அம்பேத்கர் நகர், பெத்தாங்குப்பம், குறுவன்மேடு, முல்லைநகர், பள்ளீநீர் ஓடை, கரைமேடு, வெள்ளச்சிக்குப்பம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று மாசி மகத்தை புறக்கணித்தனர். சுவாமி சிலைகள் தீர்த்தவாரிக்கு செல்லாமல் அனைத்து கிராம கோவில்களும் பூட்டப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்திருவிழவை முன்னிட்டு களைக்கட்டி காணப்படும் இந்த கிராமங்கள் இந்த ஆண்டு மாசி மகத்திருவிழா புறக்கணிப்பு காரணமாக களையிழந்து காணப்பட்டன. பெரியக்குப்பத்தில் நடக்கும் மாசிமகத்திருவிழாவிலும் இந்த கிராம மக்கள் கலந்து கொள்ளவில்லை. ஆலப்பாக்கம் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் இன்று கறுப்பு கொடியேற்றபட்டிருந்தன.
பி.என்.எஸ்.பாண்டியன், புதுச்சேரி

Saturday 21 February 2009

டைரக்டர் சீமான் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்த டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு இன்று காலை புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டார். நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் அவர் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார். நீதிபதி வீட்டின் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சினையில் டைரக்டர் சீமான் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களில் பேசும் போது தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஏற்கனவே அவர் மீது வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் புதுச்சேரியில் நடந்த கூட்டத்திலும் இதே போல இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புதுச்சேரி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய புதுச்சேரி போலீசார் தமிழக போலீசின் உதவியை கேட்டு இருந்தனர். கடந்த 17-ந் தேதி சீமான் நெல்லையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்துக்கு வந்த அவர் புதுச்சேரி மாநில வழக்குக்காக கைது செய்யப்படுவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டம் முடிந்த பின்பு அவர் காரில் வக்கீல்களுடன் சென்று விட்டார். இந்த நிலையில் டைரக்டர் சீமான் நேற்று மாலை 4.45 மணிக்கு பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது நீதிமன்ற வாசல் பூட்டப்பட்டு இருந்தது. காரில் இருந்து சீமான் இறங்கியதும் வக்கீல்கள் அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். அங்கு சீமான் தான் போலீசில் சரண் அடைய இருப்பது பற்றி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பிறகு அங்கிருந்து உடனடியாக காரில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர போலீஸ் அலுவலகத்துக்கு புறப்பட்டார். அவருடன் வக்கீல் சங்க நிர்வாகிகளும் காரில் வந்தனர். சீமான் காரில் ஏறிச் செல்வதை பார்த்து கோர்ட்டில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் ஜீப்பில் பின் தொடர்ந்து வந்தனர். போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா முன்னிலையில் அவர் சரண் அடைந்தார்.இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை புதுச்சேரி மாநில போலீசில் ஒப்படைக்க நெல்லை போலீசார் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் சீமான் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். நேற்றிரவு 10.30 மணிக்கு மதுரையில் வைத்து புதுச்சேரி தனிப்படை போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.பின்னர் அவரை புதுச்சேரி போலீஸ் எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பாபுஜி உட்பட தனிப்படை போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்து வந்தனர். போலீஸ் வாகனத்தை பின் தொடர்ந்து நெல்லை வக்கீல் சங்க செயலாளர் சிவக்குமார் உட்பட 12 வக்கீல்கள் 2 வாகனங்களில் புதுச்சேரிக்கு வந்தனர். இன்று காலை 6 மணிக்கு லாசுபேட்டை புறக்காவல் நிலையத்திற்கு சீமானை அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் சீனியர் எஸ்.பி.சிந்து பிள்ளை முன்னிலையில், வடக்குப்பகுதி எஸ்.பி.,சிவதாசன் அறிக்கை பெற்றார். பின்னர் ஏர்போர்ட் ரோட்டில் உள்ள தலைமை குற்றவியல் நீதிபதி போங்கியப்பன் முன்னிலையில் சீமான் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி வீட்டிற்கு வந்த போது அங்கு திரண்டிருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானை வாழ்த்தி கோஷமிட்டு, காங்கிரஸ் அரசை கண்டித்து பிரபாகரன் படத்தை கையில் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீமானை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் நீதிபதி வீட்டில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் ஜீப்பில் ஏறிய போது தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு மலர் து£வி வாழ்த்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அண்ணன் சீமான் வாழ்க!, மலரட்டும்! மலரட்டும்! தமிழீழம் மலரட்டும்!! மாவீரன் பிரபாகரன் வாழ்க! என்று தொடர்ச்சியாக கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி விட்டு காலாபட்டில் உள்ள சிறைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர் சீமான் அங்கு காவலில் வைக்கப்பட்டார். பி.என்.எஸ்.பாண்டியன் புதுச்சேரி