Saturday 22 March 2008

புதுச்சேரி அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோர் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்

புதுச்சேரி அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோர் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோரை உடனடியாக பதவியை விட்டு நீக்க கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 25ம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில், ஊழல் அமைச்சர்கள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வது என்பது சட்டமன்ற ஜனநாயகத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும் முர ணானது. சட்டமன்ற கூட்ட தொடருக்கு முன் னால் ஊழல் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து சட்டமன்ற மாண்பை காப்பாற்ற வேண்டும். ஊழல் அமைச்சர்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த புதுச்சேரி போலீசை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வழக்கு போட்ட போலீஸ் மீது குறை சொல்வதும், ஊழலுக்கு வெளிப்படையாக துணை போவதும், குற்றத்தை நியாயப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. அண்மை காலமாக சில அமைச்சர்கள் சட்டத்துக்கு புறம்பாகவும் சட்டமன்ற மரபுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியில் பேசி உள்ளது, அவர் ஏற்றுக் கொண்ட ரகசியகாப்பு பிரமாணத்துக்கு எதிரானது. இது சட்டப் படி குற்றமாகும். புதுச்சேரி அரசு ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக இருப்பது குறித்து ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம். ஊழல் அமைச்சர்களுக்கு அரசு ஆதரவாக இருப்பதால் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்கு பல்வேறு வகையில் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் வல்சராஜ் தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் அரசு வழக்கறிஞர் உரிய முறையில் ஆதாரங்களை முன் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. எனவே அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Saturday 15 March 2008

புதுச்சேரியில் கூடுதல் பொறுப்பு; கவர்னர் போபிந்தர் சிங் இன்று பதவி ஏற்றார்

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வந்த முகுத்மிதி தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக தனது பதவியினை கடந்த 12-ந்தேதி ராஜினாமா செய்தார். அவர் அருணாசலபிரதேசத்திலிருந்து டெல்லி மேல்சபைக்கு போட்டியிடுகிறார். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பினை அந்தமான் கவர்னரான போபிந்தர்சிங் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் அறிவித்தார். கூடுதல் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கும் போபிந்தர் சிங் இன்று காலை புதுச்சேரிக்கு வந்தார். கவர்னர் மாளிகையில் 12.15 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் புதிய கவர்னருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதுச்சேரி சட்டசபை விரைவில் கூட உள்ள நிலையில் நிரந்தரமாக புதிய கவர்னர் நியமிக்கப்படாவிட்டால் கவர்னர் உரையை போபிந்தர் சிங் வாசிப்பார்.

Wednesday 12 March 2008

புதுச்சேரி ஆளுநர் முகுத்மிதி திடீர் ராஜினாமா

பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது என்பார்கள். அதைப் போல் தான் புதுச்சேரி மாநில ஆளுநர் முகுத்மிதியும். பொது வாழ்வில் மிஸ்டர் கிளின் என்ற பட்டம் பெற்ற இவர் அருணச்சல பிரதேசத்தில் 1954ல் பிறந்தவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் தொண்டாற்றியவர். 1983 முதல் 2006 வரை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர். 1999 முதல் 2003 வரை அருணாச்சல பிரதேச முதல்வராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் பெருமைக்குறிய கோஷ்டிபூசல், அருணாச்சல பிரதேசத்திற்கு மட்டும் விதிவிலக்கா என்ன. இதன் காரணமாக இளம் வயதிலேயே புதுச்சேரிக்கு கவர்னராக்கப்பட்டார். ஏறத்தாழ 20 மாதங்கள் கவர்னர் பதவி வகித்த முகுத்மிதியை சொந்த மாநில அரசியல் இழூத்தது. இதற்காக கடந்த 3 மாதங்களாக டெல்லிக்கு அடிக்கடி சென்று வந்த முகுத்மிதிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 3 மணிக்கு அவர் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கவர்னர் மாளிகையில் தேங்கி கிடக்கும் எண்ணற்ற கோப்புகள் விடுதலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளன. முகுத்மிதி இன்று மாலையுடன் விடைபெற்றார்.

Tuesday 11 March 2008

புதுச்சேரியில் அரசியல் பூகம்பம்,,, முதல்வரை மாற்ற அமைச்சர்கள் போர்க்கொடி--அமைச்சரவையை மாற்ற ரங்கசாமி அதிரடி.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு, அமைச்சர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நிலைமையை சமாளிக்க முதல்வர் ரங்கசாமி தனது அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் வெளிப்படையாக தங்கள் எதிர்ப்பினை காட்டத் துவங்கி விட்டனர். புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி, பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி குறித்து முடிவு செய்ய ஆலோ சனை நடத்தப்பட்டது. முதல்வர் ஒரு தேதியை முன்மொழிந்தார். ஆனால் அதை அமைச்சர்கள் ஏற்கவில்லை. சட்டசபை கூடும் தேதியை ஒன்றாக பேசி தான் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், முதல்வரிடம் சில விளக்கங்களை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.பின்னர் மதியம் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் மீண்டும் அவர்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் வலுத்து வருகிறது. கடந்த முறை நடந்த அமைச்சரை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அரசு மருத்துவக் கல்லூரி பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டனர். முதல்வர், அமைச்சர்களை சமரசம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அருண்குமார் எம்.பி., கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர். இருந்தும், கருத்து வேறுபாடு இதுவரை குறையவில்லை என்பது நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் எதிரொலித்தது. முதல்வர் ரங்கசாமிக்கு அமைச்சர்கள் மீண்டும் நெருக்கடி கொடுக்க துவங்கி இருக்கின்றனர். இதனால் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கும் தேதியை முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நான் காங்கிரஸ் அமைச்சராக இருந்தாலும், இந்த சமுதாயத்தின் அடிப்படையில் சோனியாகாந்தி எனக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளார். மேலும் சிறப்புகூறு நிதி திட்ட சேர்மனாகவும் இருக்கிறேன். தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னையில் முதல்வர் சரியாக செயல்படவில்லை என இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும் பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரலாம் என்று அறிக்கை கொடுக்க இருக்கிறேன். எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடக்கவிருந்த சாலைமறியல் போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டேன். அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். வரும் நிதியாண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூரைவீடுகளை கல்வீடுகளாக மாற்றுதல், பட்டா வழங்குதல் போன்றவை விரைவாக செயல்படுத்தப்படும். எனது துறையில் அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவாரம் டெல்லியில் நடைபெறும் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்க நான் டெல்லி செல்கிறேன். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து புதுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறுவேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் செய்வார் என எதிர்பார்த்தோம். அப்படி செய்யாததால் சோனியாகாந்தியை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பற்றி புகார் கூற இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவரிடம், முதல்வருக்கும், உங்களுக்கும் இணக்கமான சூழ்நிலை உள்ளதா? என்று கேட்டதற்கு இணக்கமாக இருந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசியிருப்பார் என்றார். அமைச்சரவை கூட்டத்திற்குமுன் அமைச்சர்கள் தனியாக சந்தித்து பேசியது பற்றி கேட்டதற்கு, அமைச்சர்கள் ஒன்று கூடி பேசுவதில் தவறில்லையே என்றார். இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நேற்றிரவு நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காங்கிரஸ் தலைவர் சண்முகம் ஆகியோருக்கு அழைப்பு வந்தது. இதையேற்று சண்முகம் ஏற்கனவே டெல்லி சென்று விட்டார். முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அமைச்சரவை கூட்டம் முடிய தாமதமானதால் மாலை விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை டெல்லி செல்லும் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பயணத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்குச் சென்றார். அங்கு சோனியாவை சந்தித்து பேசுகிறார். தன் மீதான நெருக்கடியை சமாளிக்க அமைச்சரவையை மாற்றம் செய்ய சோனியாவிடம் அனுமதி கோருகிறார். இதே போல் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வல்சராஜ்,ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரும் இன்று மாலை டெல்லி செல்கின்றனர். அங்கு வரும் 14 ந்தேதி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் மற்ற புதுச்சேரி எம்.எல்.ஏ., க்களுடன் கலந்து கொள்கின்றனர். இடையே சோனியாவை சந்தித்து, முதல்வர் ரங்கசாமி குறித்து புகார் கூற உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் வெ.நாராயணசாமி எம்.பி., செய்து வருகிறார். மேலிடம் யாருக்கு ஆதரவாக முடிவு எடுக்கும் என்பது போகப்போக தெரியும்.
பி.என்.எஸ்.பாண்டியன்

Saturday 1 March 2008

அன்று மகாராஜா; இன்று எல்.ஐ.சி முகவர்-- தன் உழைப்பில் வாழும் சிங்கம்பட்டி ஜமீன்

தமிழகத்தில், குறிப்பாக தென்பகுதியில் பாளையக்காரர்களின் ஆட்சி கொடிகட்டி பறந்திருக்கிறது. பாளையக்காரர்கள் பின்னாளில் ஜமீன்தாரர்களாக மாறினர். இருந்தாலும் மக்கள் அவர்களை மகாராஜா என்றே அழைத்து வந்தனர். ஜமீன்தாரி முறை ஒழிப்பிற்கு பிறகு, ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்களான அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். சிலர், அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு பல பதவிகளில் இருந்து வருகின்றனர். ஆனால் ஒரு காலத்தில் நாடாண்ட ஒருவர் இப்போது எல்.ஐ.சி., முகவராகி தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவர் தான் சிங்கம்பட்டி ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. கி.பி.1100 ம் ஆண்டு மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தில் குலசேகர பாண்டியனுக்கும், அவனுடைய சிற்றப்பாவான பராக்கிரம பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்ட போரில், சோழர் படை உதவியுடன் சிற்றப்பாவை தோற்கடித்தான் மகன். இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஆட்சிக்கு கீழிருந்த சேதுபதிகள் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்தது. அப்போது பெருநிலப்பிரபுவாக இருந்த அபோத்தாரணத் தேவர் தன்னை பின் தொடர்ந்த மக்களோடு வெளியேறினார். புதிய வாழ் இடம் தேடி கன்னியாக்குமரி வந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் வனப்புமிக்க இடங்களில் குடியேறினர். இதனைத் தொடர்ந்து அபோத்தாரணத் தேவர் சேரன்மாதேவிக்கு அருகில் உள்ள தேவநல்லு£ர் கிராமத்தில் தனது சகாக்களோடு குடியேறினார். இது இப்படியிருக்க, தேவரின் கர்ப்பிணி பேத்தி தனது கணவருடன் கோபித்துக் கொண்டு சிங்கம்பட்டி ஜமீனுக்கு வந்து சேர்ந்தார். அவளுக்கு அழகான ஆண்குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையின் பெயர் பிரீதிபாலு. சிங்கம்பட்டியை ஆண்ட வல்லைய மன்னனுக்கு ஆண்பிள்ளை இல்லாததால் பிரீதிபாலு வாரிசாக நியமிக்கப் படுகிறார். இதனால் வல்லையர்கள் பிரீதிபாலுவை கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். பின்னர் தேவநல்லு£ரில் உள்ள தனது தந்தை வழிச்சொந்தங்களின் உதவியுடன் அரியணையில் அமர்ந்தார். திருநெல்வேலி உக்கிரன் கோட்டையை தலைநகராகக் கொண்ட பாண்டிய ராஜ்யத்தின் தென்பகுதியை ஆண்ட ,கலித பாண்டியனை எதிர்த்த, ஒரு கன்னட மன்னனை தோற்கடித்தார் பிரீதிபாலு. இதற்காக சில நிலபாகங்களையும், பரிசுகளையும் வழங்கினான் பாண்டிய மன்னன். பின்னர் விஜயநகர சாம்ராஜ்யம் விரிவடைந்த போது மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகமநாயக்கும், அவரது மகன் விஸ்வநாத நாயக்கும் தாங்கள் தான் மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் சுதந்திரம் பெற்ற ஆட்சியாளர்கள் என்று அறிவித்தனர். குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரித்து 72 பாளையங்களாக கி.பி.1433 ம் ஆண்டு மாற்றியமைத்தனர். அப்போது சிங்கம்பட்டி பாளையம் பிறந்தது. இப்படி பட்ட பரம்பரையில் வந்த சிங்கம்பட்டி இளவரசர் ஒருவர் கேரள ராஜ்யத்திற்கு எதிராக நடந்த எட்டு வீட்டு பிள்ளைமார் கலகத்தை அடக்கியதால், சிங்கம்பட்டிக்கு பத்மநாபபுரம் ராணி உமையம்மை ரத்ததான வீரப்பதக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். சிங்கம்பட்டி பரம்பரை வழி வந்தவர் தான் புலித்தேவன். முப்பதாவது தலைமுறையாக அரசாண்டவர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி. இவர் நீதிக்கட்சியில் இருந்துள்ளார். தந்தை பெரியாரின் நண்பர். இவருடைய பெயரால் அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனை, பள்ளிகள் இயங்குகின்றன. இவரது மகன் 31 வது ஜமீன் ,சென்னை இளவரசர் கல்லு£ரியில் படிக்கும் போது ஒரு கொலை காரணமாக சட்டத்தின் பிடியில் சிக்கினார். இந்த கொலை வழக்கிற்காக செலவு செய்ய சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் வெள்ளைக்கார தேயிலை கம்பெனிக்கு விற்கப்பட்டது. அதுதான் தற்போதைய மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். சிங்கம்பட்டியின் கடைசி ராஜாவாக வந்தவர் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. இலங்கை கண்டியில் ஆங்கிலக் கலா நிறுவனத்தில் படித்தவர். இவர் பட்டத்திற்கு வரும் போது தான் 1952ல் ஜமீன்தாரி முறை ஒழிப்பு வந்தது. பின்னர் ஜமீன் சொத்துக்கள் அரசுடைமையாக்கப் பட்டன. முண்டந்துறை களக்காட்டில் உள்ள சொறிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவின் போது ஒருநாள் மட்டும் ராஜ உடை அணிந்து வருகிறார் நம் சிங்கம்பட்டி ராஜா. கோயிலில் அவருக்கு ராஜமரியாதை அளிக்கப்படுகிறது. சொறிமுத்து அய்யனார் கோயிலில் சிங்கம்பட்டி வரலாற்றைக் கேட்ட எனக்கு ராஜாவை பார்க்கும் ஆவல் வந்தது. நண்பர் சாத்தப்பனிடம் கூறினேன். அவரும் வெங்கடேஷ், முரளி என நண்பர்களும் சம்மதிக்க சிங்கம்பட்டிக்குச் சென்றோம். ஊரின் எல்லையில் அமைந்திருந்த அரண்மனைக்குச் சென்றோம். அரண்மனையின் ஒரு பகுதி அரசு அலுவலகமாகவும், பள்ளிக்கூடமாகவும் மாறி இருந்தது. எங்களை வரவேற்ற ராஜா மிகவும் எதார்த்தமாக பேசத் துவங்கினார். கம்பீரமான தோற்றம் கொண்ட அந்த மனிதர், ஆன்மீகம் தொடர்பாகவே பேசிக்கொண்டிருந்தார். தான் எழூதிய தத்துவரத்தின மாலை, பேரின்பம், சிந்தனைத்துளிகள் ஆகிய புத்தகங்களைத் தந்து, சிங்கம்பட்டி வரலாற்றையும் சொல்லி முடித்தார். இப்போது தான் ஆன்மீகவாதியாக மாறிவிட்டதாகவும் கூறிய அவர், சிங்கம்பட்டி மக்கள் மீது மிகுந்த நேசம் கொண்டுள்ளார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது. தனக்குப் பின் தனது கடைசி மகன் சங்கர ஆத்மஜன் தான் பட்டத்திற்கு வரவேண்டும் என்று கூறிய அவர் தனது மருமகள் சிவகங்கை மகாராணி மதுராந்தகி நாச்சியார் என்று பெருமிதத்தோடு கூறினார். ராஜ்ஜியம் இல்லாத ராஜாவான அவரின் தற்போதைய வாழ்நிலையைக் கேட்டோம். அவர் கூறுகையில், காலையில் உடற்பயிற்சி செய்து விட்டு, யோகா செய்வேன். பின்னர் பூஜை செய்வேன். சாத்தநாதன் டிரேடர்ஸ் என்ற கம்பெனி வைத்துள்ளேன். அதன் நிர்வாகம் தொடங்கும். எல்.ஐ.சி., முகவராகவும் உள்ளேன். எனக்கு பல இடங்களில், பல நாடுகளில் நண்பர்கள் உண்டு. எல்.ஐ.சி., பாலிசி போடுவார்கள். இது தான் இப்போது எனது தொழில். நன்றாக கவனித்து வருகிறேன். ஆன்மீக சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்டு பேசுவேன். வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நான் ராஜா என்று கூறியவாறே, தனது ராஜ உடை தைப்பதற்காக ஆன செலவு குறித்தும் குறிப்பிட்டார். அதற்குள்ளாக அவரின் செல்லப் பிராணியான நாய் ஒன்று, அவர் பக்கத்தில் வந்து நின்று குரைத்தது ஏதோ சொல்வது போல் இருந்தது. பின்னர் இருக்கையை விட்டு எழுந்த ராஜா, சாப்பிடும் நேரம் கடந்து கொண்டு இருப்பதை நாய் உணர்த்துகிறது என்றார். நாங்கள் விடை பெறுவதற்காக கைகுலுக்கினோம். எதாவது ஒரு பாலிசி என்னிடம் போடுங்கள் என்றார் விளையாட்டாக. எங்கள் அனைவர் மத்தியிலும் சிரிப்பலை தான். பின்னர் அரண்மனையைச் சுற்றிப் பார்த்தோம். அனைத்து பொருட்களிலும் 2 சிங்கங்கள் பொறித்த ஜமீனின் சின்னம் பொறிக்கப் பட்டிருந்தது. குதிரைக் குளம்பில் செய்யப் பட்ட ஆஷ்டிரே, யானையின் தலைப்பகுதி, சோடா தயாரிக்கும் கூஜா, பிரமாண்டமான பாத்திரங்கள் ஆகியவை வளமாக இருந்த சிங்கம்பட்டியை உணர்த்தின.