Thursday 28 February 2008

அற்புதமான நினைவலைகள் அடங்கிய தொகுப்பு

தமிழ் எழுத்துலகில் அறிவியல் அதிர்வை ஏற்படுத்திய திருமிகு. சுஜாதா அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. 1990 ஜூலையில் விகடன் மாணவ நிருபர்கள் பயிற்சி முகாமில் சுஜாதா அவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. கணனிகள் வெகு பிரபலமாகாத காலமது.அந்த நடமாடும் கணனியை பார்த்து,பேசி,பிரமித்து போனேன்.
எந்தவித கடினமான அறிவியல் விஷயத்தையும் புரியும்படி நகைச்சுவையோடு சொல்லும் பாணியை அறிமுக படுத்தியவரின்,‘18 சிறுகதைகள்’ தொகுப்பை சில ஆண்டுகளு’கு முன்பு குங்குமத்தின் தற்போதைய முதன்மை ஆசிரியர் முருகன் என்னிடம் கொடுத்தார். அதில் முதல் கதை... ஒரு தாய் தனது குழந்தையுடன் மருத்துவமனை’கு வருவார்.நகர விஷயங்கள் புரிபடாமல் குழந்தை’கு மருத்துவம் பார்க்காமலேயே கிராமத்து சாமியின் விபூதி சரி செய்துவிடும் என்ற நம்பிக்கையில் திரும்பிவிடுவார். என்றைக்காவது குறும்படம் எடுக்க நேர்ந்தால் இதைத்தான் முதலில் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.....சுஜாதா அவர்களின் ஆன்மா தான் இனி அதற்கு அனுமதியளிக்க வேண்டும்.
..........துயருடன்
தருமராஜன்,தினகரன்,புதுச்சேரி

Wednesday 27 February 2008

கண்ணீர் வடிக்கிறேன்

இன்றைய தினம் இந்திய துணைக் கண்டத்தின் நவீன அறிவியலின் அற்புதர் நம்மை விட்டு மறைந்துள்ளார். அவர் தான் எழுத்தாளர் சுஜாதா. நடமாடும் ஆய்வகமான அவர் எழுத்தாளர் மட்டுமன்று. இன்று இந்திய மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்களிக்க பயன்படும், வாக்களிக்கும் எந்திரம் உருவாக காரணமானவர். 1950ல் வாழ்ந்துக் கொண்டு 2000 த்தைப் பற்றி எழுதியவர். 2000 த்தில் 2050யை பற்றி எழுதியவர். 1935 மே மாதம் 3 ந்தேதி பிறந்த அவதரித்தவர். எனக்கு கருத்து அறியப்பட்டதில் இருந்து அவர் எழுத்துக்கள் என்னை கவர்ந்தன. சமுதாய விஞ்ஞானியான அவர் திருவல்லிக்கேணியில் எஸ்.ரங்கநாதனாக பிறந்து, இன்று சுஜாதா என்று அனைத்து பிரிவு மக்களாலும் அன்போடு அழைக்கப் பட்டு வந்தார்.விஞ்ஞானச் சிறுகதைகள், சாகசக் கதைகள், மர்மக் கதைகள், மத்யமர் கதைகள், ஸ்ரீ ரங்கத்துக் கதைகள் என்றும் குறுநாவல்களை கணேஷ், வசந்த் தோன்றும் நாவல்கள், தீவிரமான கருத்துகள் கொண்ட நாவல்கள் என்றும் நாடகங்களை படிக்கும் நாடகங்கள், நடிக்கும் நாடகங்கள் என்றும் கட்டுரைகளை விஞ்ஞானக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், கற்றதும் பெற்றதும் கட்டுரைகள் இப்படி என எத்தனையோ படைப்புகள். கடந்த ஆண்டு பத்திரிகையாளர் தினவிழாவிற்கு யாரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, சுஜாதாவை அழைக்கலாம் என்று என் நண்பரும், தினகரன் நாளிதழின் புதுச்சேரி பொறுப்பாசிரியர் ராம.தர்மராஜன் கூறினார். எனக்கும் அது தான் சரி எனப்பட்டது. குங்குமம் வார இதழின் பொறுப்பாசிரியராக செயல்படும் அன்பு நண்பர் முருகனிடம் விருப்பத்தை தெரிவித்தோம். முருகனை, சுஜாதா நன்கு அறிவார். முருகனும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் உடல்நிலை கருதி, வெளியூர்களுக்கு அவர் வரமுடியாத நிலையில் உள்ளதாக சுஜாதாவே கூறினார். இருப்பினும் முருகன் முயன்றார். ஆனால் இறுதியில் ஏமாற்றம் தான். கணிப்பொறியும், இணையதளங்களையும் எனக்கு அறிமுகப்படுத்திய என் அறிவியல் அன்னையே உன்னை இழந்து கண்ணீர் வடிக்கிறேன்.