Thursday 16 June 2011

புதுச்சேரியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றினார்:




புதுச்சேரியில் முதியோருக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து முதல்&அமைச்சராக பொறுப்பேற்ற ரங்கசாமி முதலாவதாக 3 திட்டங்களில் கையெழுத்திட்டார்.
முன்னதாக அவரது என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை ரூ. 750-ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நேற்று மாலை இந்திராநகர் தொகுதி திலாசுப்பேட்டையில் உள்ள மந்தைவெளி திடலில் நடந்தது. இந்த விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சந்திரகாசு, ராஜவேலு, பன்னீர் செல்வம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், டி.பி.ஆர். செல்வம், நேரு என்கிற குப்புசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 51 கோடி கூடுதல் செலவாகும்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை முழுவதுமாக 100அடி ரோட்டில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு தற்போது 800 பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கும் திட்டம் வருகிற ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்படும்.
இதில் மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு 15 கிலோ அரிசியும், சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 25 கிலோ அரிசியும், பரம ஏழை மக்களுக்கு 35 கிலோ அரிசியும் வழங்கப்படும். அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கவுன்சில் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்டவாறு ரங்கசாமி கூறினார்.

அரசு பள்ளியில் மகளை சேர்த்த ஈரோடு மாவட்ட கலெக்டர்



ஈரோடு மாவட்ட கலெக்டர் அனந்தகுமார் தனது மகளை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2&ம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கூடத்தில் மதியம் வழங்கப்படும் சத்துணவை சாப்பிடவும் மகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றி வருபவர் ஆர்.அனந்தகுமார். இவருடைய மனைவி ஸ்ரீவித்யா. இவர்களுக்கு கோபிகா (வயது 7), தீபிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கலெக்டர் அனந்தகுமார் இதற்கு முன்பு தர்மபுரியில் கலெக்டராக பணியாற்றினார். அப்போது இவருடைய மகள் கோபிகா தர்மபுரியில் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தாள்.
இந்த நிலையில் கலெக்டர் அனந்தகுமார் ஈரோடு மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டதால், அவர் குடும்பத்துடன் ஈரோட்டிற்கு வந்தார். அப்போது மகளின் மாற்றுசான்றிதழையும் கலெக்டர் அனந்தகுமார் அந்த பள்ளிக்கூடத்தில் இருந்து வாங்கி கொண்டு ஈரோட்டிற்கு வந்தார்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஈரோடு குமலன்குட்டையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடமும் நேற்று காலை திறக்கப்பட்டது.

காலை இறைவணக்கம் முடிந்ததும் பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்த்து கொண்டு இருந்தார். மாணவர் சேர்க்கை பணியை ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி பார்வையிட்டு கொண்டு இருந்தார்.

அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அவருடைய மனைவி ஸ்ரீவித்யா, மகள் கோபிகா ஆகியோருடன் நின்று கொண்டிருந்ததை பார்த்தார். மாவட்ட கலெக்டர் காலை நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பதை பார்த்த தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, தலைமை ஆசிரியை ராணி ஆகியோர் கலெக்டரிடம் சென்றனர்.

அப்போது கலெக்டர் அனந்தகுமார், தன்னுடைய மகள் கோபிகாவை, பள்ளியில் 2&ம் வகுப்பில் சேர்க்க வந்திருப்பதாக கூறினார். இதை கேட்டு ஆச்சரியம் அடைந்த தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, தலைமை ஆசிரியை ராணி ஆகியோர், கலெக்டர் அனந்தகுமாரை தலைமை ஆசிரியையின் அறைக்கு அழைத்து சென்றார்கள்.

பிறகு தனது மகள் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியையிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டரின் மகள் கோபிகா 2-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அனந்தகுமார், தலைமை ஆசிரியர் ராணியிடம், மாணவ&மாணவிகளுக்கு சீருடை கொடுப்பது குறித்து கேட்டார். அதற்கு தலைமை ஆசிரியர் ராணி, சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும்தான் சீருடை கொடுக்கப்படும் என்று கூறினார். அதை கேட்ட கலெக்டர் அனந்தகுமார், தன்னுடைய மகள் கோபிகாவையும், பள்ளிக்கூடத்தில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிடட்டும் என்று கூறினார். பின்னர், மகள் கோபிகாவை, 2-ம் வகுப்பில் மற்ற மாணவ-மாணவிகளுடன் அமரவைத்து விட்டு, கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அரசு பள்ளியில் சேர்க்கப்பட்ட கோபிகா, அங்கு படித்து வரும் மற்ற மாணவ-மாணவிகளுடன் அமர்ந்தார். அதைத்தொடர்ந்து ஆசிரியை ஒருவர் மாணவி கோபிகாவிற்கு தமிழ் எழுத்துக்களை சிலேட்டில் எழுதி காட்டினார். அதை கோபிகா திரும்பி எழுதி ஆசிரியையிடம் காண்பித்தார்.

அரசு பள்ளிக்கூடத்தில் மகளை சேர்த்த கலெக்டர் அனந்தகுமார், அவருடைய மனைவி ஸ்ரீவித்யா ஆகிய 2 பேரும் பள்ளியின் புரவலர் திட்டத்தில் தங்களை சேர்த்து கொண்டார்கள். நாம் கஷ்டபட்டாலும் பரவாயில்லை. நம்முடைய குழந்தைகள் தனியார் பள்ளியில் நன்றாக படிக்க வேண்டும் என்று அதிக கல்வி கட்டணத்தை செலுத்தி படிக்க வைப்போம். இப்படிப்பட்ட காலநிலையில், ஒரு மாவட்ட கலெக்டர், தன்னுடைய மகளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருப்பது அனைவரையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துள்ளது.

மகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து உள்ளது குறித்து கலெக்டர் அனந்தகுமாரிடம் கேட்ட போது, இது என்னுடைய தனிப்பட்ட விஷயம், என்று தெரிவித்தார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள சம்பத் நகரில் கலெக்டரின் பங்களா அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குமலன்குட்டை என்ற இடத்தில்தான் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தனது மகளை சேர்த்துள்ள ஈரோடு கலெக்டர் அனந்தகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் பல்லடம் வதம்பசேரி ஆகும். இவர் கால்நடைத்துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். 2003-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். புதிய அரசு அமைந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டராக அனந்தகுமார் நியமிக்கப்பட்டார்.

மாவட்ட கலெக்டர் தனது மகளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் சேர்த்து இருப்பது பெற்றோர், மாணவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday 9 March 2011

புதுச்சேரி தேர்தலில் போட்டியிட சபாநாயகர் மறுப்பு


புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட சபாநாயகர் ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் (கண்ணன் கட்சி) சார்பில் குருவிநத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர் ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 31. எம்.பி.ஏ., பட்டதாரியான இவரது தந்தை முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன் ஆவார். புதிய சிந்தனையோடு அரசியலுக்கு வந்த ராதாகிருஷ்ணனை அப்போதைய முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகள் கவர்ந்தன. ராதாகிருஷ்ணன் புதுவை குடிசை மாற்று தலைவராக ஆனார். குடிசை இல்லா புதுவை என்ற திட்டத்தை கொண்டு வந்து பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பாடுபட்டார். இதன் காரணமாக புதுச்சேரியில் ஏராளமான குடிசை வீடுகள் கல்வீடுகளாக மாறின. ராதாகிருஷ்ணனின் செல்வாக்கு தொகுதி மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் வேகமாக பரவியது. இந்நிலையில் கண்ணன் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்தபோது ராதாகிருஷ்ணன் காங்கிரசில் இணைந்தார்.
இதனிடையே கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது கண்ணன் மீண்டும் காங்கிரஸ் தலைமையுடன் கொண்ட முரண்பாட்டின் காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். ஆனால் அப்போது ராதாகிருஷ்ணன் காங்கிரசிலேயே தங்கிவிட்டார். அந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணனுக்கு சீட் பெற்று தர முதல்வர் ரங்கசாமி தீவிரமாக முயன்றார். ஆனால், முன்னதாக ராதாகிருஷ்ணணை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தியாகராஜனுக்கு சீட் பெற நாராயணசாமி எம்.பி., கடுமையாக முயன்றார். முன்னாள் முதல்வர் சண்முகம் மற்றும் ரங்கசாமி முயற்சியின் பேரில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரசில் சீட் கிடைத்தது.
அப்போது அவரை எதிர்த்து குருவிநத்தம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்த எதிர்கட்சிகள் திக்குமுக்காடின. இறுதிக்கட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளராக முன்னாள் பாண்லே இயக்குநர் நவநீதகண்ணன் களம் இறக்கப்பட்டார். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பல்வேறு சக்திகள் மறைமுகமாக தேர்தல் வேலை செய்தபோதும், மக்கள் அவரை விரும்பினர். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நவநீதகண்ணன் படுதோல்வியடைந்தார். மற்றவர்களின் டெபாசிட் பறிபோனது.
காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ரங்கசாமி முதல்வராக ஆனார். ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி அளிக்காமல் சபாநாயகர் ஆக்கினார்கள். இளம்வயதில் ஒருவரை சபாநாயகர் ஆக்கிவிட்டு அவரது செயல்பாடுகள் முடங்குவதற்கு காங்கிரசில் உள்ள சில சக்திகள் காரணமாக அமைந்தன.
சபாநாயகர் ஆனதும் அவரால் கட்சிப்பணிகளில் நேரடியாக ஈடுபட முடியவில்லை. அவரது தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சீட்டு கேட்ட தியாகராஜனுக்கு நியமன எம்.எல்.ஏ., பதவி தந்தனர். இதன்காரணமாக ராதாகிருஷ்ணனை ஓரம் கட்ட நினைத்தனர். ஆனால் அவர் அசரவில்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல இருக்கின்ற பதவிக்கு அழகு சேர்க்கின்ற வகையில் புதுச்சேரி சட்டசபையின் பொன்விழாவை கொண்டாடினார். இவரது காலத்தில் தான் புதுச்சேரி சட்டசபைக்கு ஜனாதிபதி அப்துல்கலாம், பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் வருகை தந்தனர். சட்டசபையை புதுப்பொலிவாக்கினார். பல காலமாக தினக்கூலிகளாக பணியாற்றியவர்கள் நிரந்தரமாக்கப்பட்டார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் குறைகளை கலைந்தார். தொகுப்பூதியத்தை அதிகப்படுத்தினார்.
தனது குருவிநத்தம் தொகுதியில் உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டில் படுகை அணையை அமைத்துக் கொடுத்தார். இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் கிடைத்தது. மகசூல் பெருகியது. கடலு£ர்- பனையடிக்குப்பத்தை இணைக்கும் பாலத்தை மத்திய அமைச்சர் சிதம்பரத்தை வரவழைத்து திறப்புவிழா கண்டார். இதன் காரணமாக போக்குவரத்து சீரமைந்தது. தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.
இதனிடையே கடந்த 1ந் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசு காரை தனது அலுவலத்தில் எடுத்து வந்து விட்டு, தனது சொந்த காரில் ஏறிச் சென்றவர் இதுவரை எங்கு சென்றார் என்று தெரியவில்லை. சபாநாயகர் அலுவலகமும் பூட்டப்பட்டு உள்ளது. அவரது வீட்டில் விசாரித்தால் வெளியூர் சென்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.
கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து வருகின்றனர். தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியை தேர்வு செய்து மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. அவர் வெளிநாடு சென்று விட்டதாகவும், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் தகவல் பரவியுள்ளது. இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபாநாயகர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப்போவதில்லை. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சபாநாயகரின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், வரும் தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் வழங்கப்பட்டாலும், தியாகராஜனுக்கு நியமன எம்.எல்.ஏ., பதவி தருவார்கள். அவர் எங்கள் தொகுதியில் எங்களை ஓரங்கட்டி விட்டு அரசியல் செய்வார். எங்குமே இந்த நிலை ஏற்படாது. எங்கள் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகருக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ., கோஷ்டி வளர்ப்பார். இது என்ன நியாயம். நாங்கள் தேர்தலில் மக்களை சந்தித்து படாதபாடு பட்டு வெற்றி பெறுவோம். ஆனால் கட்சியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஒருவர் நியமன எம்.எல்.ஏ., பதவி பெறுவதா? இந்த முறை எங்களுக்கு தேர்தல் அரசியல் தேவையில்லை. அவரே நிற்கட்டும். நாங்கள் நியமன எம்.எல்.ஏ., பதவியை பெற்றுக் கொள்கிறோம் என்றார்.
என்.ஆர்.காங்கிரசில் சபாநாயகர் சேருவரா என்று கேட்டதற்கு, நியாயமாக பார்த்தால் நாங்கள் ரங்கசாமி பக்கம் தான் நிற்கவேண்டும். ஆனால் காங்கிரசை விட்டு நாங்கள் ஏன் போக வேண்டும். காங்கிரசில் வெற்றி பெற்றோம். காங்கிரசுக்கு புகழைத்தான் சேர்த்திருக்கிறோம். விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம் என்றார்.

Tuesday 8 March 2011

புதுச்சேரியில் சட்டசபைத்தேர்தல் படுத்தும் பாடு:


புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தங்களின் வெற்றிவாய்ப்புக்காக ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மறுக்காமல் செய்து வருகின்றனர் முக்கிய புள்ளிகள். ஜோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பரிகார பூஜைகளுக்கு தண்ணீராக காசை செலவுசெய்து வருகின்றனர்.
புதுச்சேரி அழகிய சின்னஞ்சிறு பிரதேசம். பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல். ஒரு காலத்தில் புதுச்சேரி தான் பகுத்தறிவு கொள்கைகளுக்கு வாயில்படியாக இருந்தது. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் வருவதற்கு முன்பே தந்தை பெரியாரை அழைத்து வந்து தன் மதிப்புக்கழகம் என்ற பகுத்தறிவு கழகத்தைக் திறந்து தம்பி சுப்ரமணியன், நோயல் போன்றோர் இறைமறுப்பு இயக்கத்தை நடத்தினர். கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடி போகவேண்டும் என்ற சூளுரையுடன் பாவேந்தர் பாரதிதாசனை தலைவராகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. புதுவை சிவம் போன்ற திராவிட இயக்க முன்னோடிகள் பகுத்தறிவு கொள்கைகளுக்காகவே வாழ்ந்தனர். மூடநம்பிக்கைகள் சாடப்பட்டு வந்தன. ஆனால் இன்று புதுச்சேரியில் உள்ள தி.மு.க., வினரின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிட்டது. ஜோதிடர்கள் சொல்வதற்கு எல்லாம் ஆடும் நிலையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் கட்சித்தலைமையும் உள்ளது.
புதுச்சேரி தி.மு.க., தலைமையின் முக்கிய புள்ளி டீ சாப்பிடுவற்கு கூட ஜோதிடரை அழைத்து கேட்பாராம். அவரது துணைவி தன்னுடைய கைப்பையில் எப்போதும் குடும்ப ஜாதகத்தை து£க்கிக் கொண்டு அலைகிறார். யாராவது புதிதாக ஜோதிடர் ஒருவரைக்கூறி விட்டால் அந்த ஜோதிடரை பார்க்காவிட்டால் அம்மணிக்கு தலை வெடித்து விடுமாம். முக்கிய புள்ளியின் உதவியாளர் ஊரில் உள்ள ஜோதிடர்களை எல்லாம் அழைத்து வந்து விடுவாராம். கிளிஜோதிடம். கைரேகை, வாஸ்து நிபுணர், தொடுகுறி ஜோதிடம், ஓலைச்சுவடி ஜோதிடம், நாடி ஜோதிடம், சோழி ஜோதிடம், திருவிளக்கு ஜோதிடம், எண் கணித ஜோதிடம் என்று அந்த வீட்டிற்குள் நுழையாத ஜோதிடர்களே கிடையாது.
எதிர்வரும் தேர்தலில் எதிரியை வீழ்த்த அலுமினிய பாத்திரம் தானம் செய்யவேண்டும் என்று ஜோதிடர் சொல்லி விட்டதால் சம்பந்தப்பட்ட தொகுதியில் வீட்டுக்கு வீடு குக்கர் வழங்கினாராம் இந்த பெரிய மனிதர்.
இது இப்படி இருக்க, இவரை எதிர்க்கும் அ.தி.மு.க., புள்ளி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 21 புரோகிதர்களை வைத்து,. பல லட்சரூபாய் செலவு செய்து சத்ரு சம்ஹார யாகம் நடத்தினாராம். பின்னர் புரோகிதர்களுக்கு தங்ககாசுகளை கொடுத்தாராம். அதன்பின்னர் தான் ஜெ.பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தன்னை யாராலும் ஜெயிக்க முடியாது என்று பெருமிதத்துடன் கூறினாராம்.
இந்நிலையில் தி.மு.க., வைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ., இந்த முறை தனது வெற்றிக்காக பகீரதபிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளதால் அவரும் ஜோதிடர் வீடுகளாக நுழைந்து வருகிறார். அவரது பரிதாப நிலையை பார்த்து ஒவ்வொரு ஜோதிடரும், ஒவ்வொரு பரிகாரத்தை சொல்லி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிஷேகப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கோயிலில் பசுதானம் செய்தாராம். நெற்றியில் புருவங்கள் இணையும் பகுதியை வெளிப்படையாக காட்டக்கூடாது என்று ஜோதிடர் கூறியதால் தற்போது நெற்றியில் விபூதி, குங்குமம் சகிதமாக வலம் வருகிறாராம் அந்த சிவமயமான எம்.எல்.ஏ. ஆனால், அண்ணா அறிவாலயம் பக்கம் செல்லும் போது மட்டும் விபூதி, குங்குமத்தை கலைத்து விடுகிறாராம்.
வரும் தேர்தலுக்காக அறிவாலயத்தில் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியானது. புதுச்சேரி தி.மு.க.,வினர் அம்மாவாசை தினத்தன்று வேட்புமனு தாக்கல் செய்து ஜோதிடத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. எதாவது கேட்டால் எல்லாமே நம்பிக்கை தான் என்று கூறுகிறார்கள். இவர்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது என்பது உண்மை தான்.
இது ஒரு புறம் இருந்தாலும், ‘நாங்க மட்டும என்ன சும்மாவா?’ என்று கேட்பது போல் முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஜோதிடர் குறித்து கொடுத்த தினத்தில் தனது கட்சி மாநாட்டை நடத்தியுள்ளார். ராகுகாலத்திற்கு முன்னதாக மேடைக்கு வந்து பேசினார். தனது கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்துவிட்டு தான் அவர்களின் செல்வாக்கு பற்றி யோசிக்கிறார்.
ரங்கசாமியிடம் சீட்டு வேண்டும் என்று கேட்பவர்கள் எல்லாம் தங்கள் ஜாதகத்தை கையோடு கொண்டு செல்கின்றனர். ‘எனக்கு சனி உச்சத்தில் இருக்கிறது. குரு வக்கிரத்தில் இருக்கிறது. புதன் து£ரத்தில் இருக்கிறது. சுக்கிரன் எனக்கு பக்கம் தான் என்று கூறி வெற்றி எனக்குத்தான் சீட்டு கொடுங்க!’ என்று நச்சரித்து வருகின்றனர். அவரும் அந்த ஜாதகத்தை கையால் தொடாமல் பார்க்கலாம்.. பார்க்கலாம்.. என்று கூறி நழுவி விடுகிறார்.
இதையெல்லாம் ஒரு படி மீறிவிட்டார் முதல்வர் வைத்திலிங்கம். அவரது காரில் எப்போதும் ஒரு ஜோதிடர் பயணம் செய்கிறார். அவர் ரைட் சொன்னால் தான் கார் திரும்புகிறது என்ற நிலை உள்ளது. தற்போது முதல்வர் வைத்திலிங்கத்திற்கு குருயோகம் சரியில்லையாம். அவர் மிதுனராசி- திருவாதிரை நட்சத்திரக்காரர் என்பதால் நெற்றியில் குருவுக்குரிய நிறமான சந்தனத்தை வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஜோதிடர் அறிவுரை கூறியதால் இப்போது தன் நெற்றியில் சந்தனப்பொட்டோடு வலம் வருகிறார் முதல்வர். கடந்த 6 ந் தேதி தனது காமராஜர் தொகுதியில் சனிமூலையான சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் ஜோதிடர் அறிவுரைப்படி வாக்கு சேகரிக்கத் தொடங்கி விட்டார்.
புதுச்சேரியில் ஜோதிடம், பூஜை, பரிகாரம் என்பது இந்த முக்கிய புள்ளிகளை மட்டும் விட்டுவைக்கவில்லை. இப்படித்தான் புதிய நீதிக்கட்சி பிரமுகர் ஒருவர்,’ நான் அமைச்சராகும் யோகம் இருக்கிறதா?’ என்று ஜோதிடரிடம் கேட்க ஜோதிடருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டதாம்.