Thursday 16 June 2011

புதுச்சேரியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றினார்:




புதுச்சேரியில் முதியோருக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து முதல்&அமைச்சராக பொறுப்பேற்ற ரங்கசாமி முதலாவதாக 3 திட்டங்களில் கையெழுத்திட்டார்.
முன்னதாக அவரது என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை ரூ. 750-ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நேற்று மாலை இந்திராநகர் தொகுதி திலாசுப்பேட்டையில் உள்ள மந்தைவெளி திடலில் நடந்தது. இந்த விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சந்திரகாசு, ராஜவேலு, பன்னீர் செல்வம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், டி.பி.ஆர். செல்வம், நேரு என்கிற குப்புசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 51 கோடி கூடுதல் செலவாகும்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை முழுவதுமாக 100அடி ரோட்டில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு தற்போது 800 பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கும் திட்டம் வருகிற ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்படும்.
இதில் மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு 15 கிலோ அரிசியும், சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 25 கிலோ அரிசியும், பரம ஏழை மக்களுக்கு 35 கிலோ அரிசியும் வழங்கப்படும். அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கவுன்சில் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்டவாறு ரங்கசாமி கூறினார்.

அரசு பள்ளியில் மகளை சேர்த்த ஈரோடு மாவட்ட கலெக்டர்



ஈரோடு மாவட்ட கலெக்டர் அனந்தகுமார் தனது மகளை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2&ம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கூடத்தில் மதியம் வழங்கப்படும் சத்துணவை சாப்பிடவும் மகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றி வருபவர் ஆர்.அனந்தகுமார். இவருடைய மனைவி ஸ்ரீவித்யா. இவர்களுக்கு கோபிகா (வயது 7), தீபிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கலெக்டர் அனந்தகுமார் இதற்கு முன்பு தர்மபுரியில் கலெக்டராக பணியாற்றினார். அப்போது இவருடைய மகள் கோபிகா தர்மபுரியில் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தாள்.
இந்த நிலையில் கலெக்டர் அனந்தகுமார் ஈரோடு மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டதால், அவர் குடும்பத்துடன் ஈரோட்டிற்கு வந்தார். அப்போது மகளின் மாற்றுசான்றிதழையும் கலெக்டர் அனந்தகுமார் அந்த பள்ளிக்கூடத்தில் இருந்து வாங்கி கொண்டு ஈரோட்டிற்கு வந்தார்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஈரோடு குமலன்குட்டையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடமும் நேற்று காலை திறக்கப்பட்டது.

காலை இறைவணக்கம் முடிந்ததும் பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்த்து கொண்டு இருந்தார். மாணவர் சேர்க்கை பணியை ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி பார்வையிட்டு கொண்டு இருந்தார்.

அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அவருடைய மனைவி ஸ்ரீவித்யா, மகள் கோபிகா ஆகியோருடன் நின்று கொண்டிருந்ததை பார்த்தார். மாவட்ட கலெக்டர் காலை நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பதை பார்த்த தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, தலைமை ஆசிரியை ராணி ஆகியோர் கலெக்டரிடம் சென்றனர்.

அப்போது கலெக்டர் அனந்தகுமார், தன்னுடைய மகள் கோபிகாவை, பள்ளியில் 2&ம் வகுப்பில் சேர்க்க வந்திருப்பதாக கூறினார். இதை கேட்டு ஆச்சரியம் அடைந்த தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, தலைமை ஆசிரியை ராணி ஆகியோர், கலெக்டர் அனந்தகுமாரை தலைமை ஆசிரியையின் அறைக்கு அழைத்து சென்றார்கள்.

பிறகு தனது மகள் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியையிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டரின் மகள் கோபிகா 2-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அனந்தகுமார், தலைமை ஆசிரியர் ராணியிடம், மாணவ&மாணவிகளுக்கு சீருடை கொடுப்பது குறித்து கேட்டார். அதற்கு தலைமை ஆசிரியர் ராணி, சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும்தான் சீருடை கொடுக்கப்படும் என்று கூறினார். அதை கேட்ட கலெக்டர் அனந்தகுமார், தன்னுடைய மகள் கோபிகாவையும், பள்ளிக்கூடத்தில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிடட்டும் என்று கூறினார். பின்னர், மகள் கோபிகாவை, 2-ம் வகுப்பில் மற்ற மாணவ-மாணவிகளுடன் அமரவைத்து விட்டு, கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அரசு பள்ளியில் சேர்க்கப்பட்ட கோபிகா, அங்கு படித்து வரும் மற்ற மாணவ-மாணவிகளுடன் அமர்ந்தார். அதைத்தொடர்ந்து ஆசிரியை ஒருவர் மாணவி கோபிகாவிற்கு தமிழ் எழுத்துக்களை சிலேட்டில் எழுதி காட்டினார். அதை கோபிகா திரும்பி எழுதி ஆசிரியையிடம் காண்பித்தார்.

அரசு பள்ளிக்கூடத்தில் மகளை சேர்த்த கலெக்டர் அனந்தகுமார், அவருடைய மனைவி ஸ்ரீவித்யா ஆகிய 2 பேரும் பள்ளியின் புரவலர் திட்டத்தில் தங்களை சேர்த்து கொண்டார்கள். நாம் கஷ்டபட்டாலும் பரவாயில்லை. நம்முடைய குழந்தைகள் தனியார் பள்ளியில் நன்றாக படிக்க வேண்டும் என்று அதிக கல்வி கட்டணத்தை செலுத்தி படிக்க வைப்போம். இப்படிப்பட்ட காலநிலையில், ஒரு மாவட்ட கலெக்டர், தன்னுடைய மகளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருப்பது அனைவரையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துள்ளது.

மகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து உள்ளது குறித்து கலெக்டர் அனந்தகுமாரிடம் கேட்ட போது, இது என்னுடைய தனிப்பட்ட விஷயம், என்று தெரிவித்தார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள சம்பத் நகரில் கலெக்டரின் பங்களா அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குமலன்குட்டை என்ற இடத்தில்தான் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தனது மகளை சேர்த்துள்ள ஈரோடு கலெக்டர் அனந்தகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் பல்லடம் வதம்பசேரி ஆகும். இவர் கால்நடைத்துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். 2003-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். புதிய அரசு அமைந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டராக அனந்தகுமார் நியமிக்கப்பட்டார்.

மாவட்ட கலெக்டர் தனது மகளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் சேர்த்து இருப்பது பெற்றோர், மாணவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.