Wednesday 1 October 2008

ரூ.1 லட்சம் விலையில் திருக்குறள் பட்டு சேலை

புதுச்சேரி கோ-ஆப்டெக்சில் ரூ. 1 லட்சம் விலையில் திருக்குறள் பட்டு சேலை அறிமுகப்படுத்தப்பட்டது. புதுச்சேரி நேருவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி தலைவி டாக்டர் ஸ்ரீதேவி, கவுன்சிலர் குமரன் கலந்து கொண்டனர். இந்த அங்காடியில் 1330 திருக்குறள் வரிகள் அடங்கிய பட்டுசேலை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ. 1 லட்சம் ஆகும். இந்த அங்காடியில் பட்டுவேலைகள், தீபம் சேலைகள், சிறுமுகை சேலைகள், படுக்கை விரிப்புகள், வேட்டிகள், துண்டுகள், கைலிகள், பெண்களுக்கான சுடிதார் ரகங்கள், விற்பனை செய்யப்படுகிறது. அரசுத்துறை பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இங்கு கடன் வசதியும் அளிக்கப்படுகிறது. மேலும் துணி வாங்குபவர்களுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.