Saturday 22 March 2008

புதுச்சேரி அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோர் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்

புதுச்சேரி அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோர் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோரை உடனடியாக பதவியை விட்டு நீக்க கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 25ம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில், ஊழல் அமைச்சர்கள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வது என்பது சட்டமன்ற ஜனநாயகத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும் முர ணானது. சட்டமன்ற கூட்ட தொடருக்கு முன் னால் ஊழல் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து சட்டமன்ற மாண்பை காப்பாற்ற வேண்டும். ஊழல் அமைச்சர்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த புதுச்சேரி போலீசை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வழக்கு போட்ட போலீஸ் மீது குறை சொல்வதும், ஊழலுக்கு வெளிப்படையாக துணை போவதும், குற்றத்தை நியாயப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. அண்மை காலமாக சில அமைச்சர்கள் சட்டத்துக்கு புறம்பாகவும் சட்டமன்ற மரபுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியில் பேசி உள்ளது, அவர் ஏற்றுக் கொண்ட ரகசியகாப்பு பிரமாணத்துக்கு எதிரானது. இது சட்டப் படி குற்றமாகும். புதுச்சேரி அரசு ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக இருப்பது குறித்து ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம். ஊழல் அமைச்சர்களுக்கு அரசு ஆதரவாக இருப்பதால் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்கு பல்வேறு வகையில் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் வல்சராஜ் தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் அரசு வழக்கறிஞர் உரிய முறையில் ஆதாரங்களை முன் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. எனவே அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments: