Tuesday 8 March 2011

புதுச்சேரியில் சட்டசபைத்தேர்தல் படுத்தும் பாடு:


புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தங்களின் வெற்றிவாய்ப்புக்காக ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மறுக்காமல் செய்து வருகின்றனர் முக்கிய புள்ளிகள். ஜோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பரிகார பூஜைகளுக்கு தண்ணீராக காசை செலவுசெய்து வருகின்றனர்.
புதுச்சேரி அழகிய சின்னஞ்சிறு பிரதேசம். பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல். ஒரு காலத்தில் புதுச்சேரி தான் பகுத்தறிவு கொள்கைகளுக்கு வாயில்படியாக இருந்தது. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் வருவதற்கு முன்பே தந்தை பெரியாரை அழைத்து வந்து தன் மதிப்புக்கழகம் என்ற பகுத்தறிவு கழகத்தைக் திறந்து தம்பி சுப்ரமணியன், நோயல் போன்றோர் இறைமறுப்பு இயக்கத்தை நடத்தினர். கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடி போகவேண்டும் என்ற சூளுரையுடன் பாவேந்தர் பாரதிதாசனை தலைவராகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. புதுவை சிவம் போன்ற திராவிட இயக்க முன்னோடிகள் பகுத்தறிவு கொள்கைகளுக்காகவே வாழ்ந்தனர். மூடநம்பிக்கைகள் சாடப்பட்டு வந்தன. ஆனால் இன்று புதுச்சேரியில் உள்ள தி.மு.க., வினரின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிட்டது. ஜோதிடர்கள் சொல்வதற்கு எல்லாம் ஆடும் நிலையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் கட்சித்தலைமையும் உள்ளது.
புதுச்சேரி தி.மு.க., தலைமையின் முக்கிய புள்ளி டீ சாப்பிடுவற்கு கூட ஜோதிடரை அழைத்து கேட்பாராம். அவரது துணைவி தன்னுடைய கைப்பையில் எப்போதும் குடும்ப ஜாதகத்தை து£க்கிக் கொண்டு அலைகிறார். யாராவது புதிதாக ஜோதிடர் ஒருவரைக்கூறி விட்டால் அந்த ஜோதிடரை பார்க்காவிட்டால் அம்மணிக்கு தலை வெடித்து விடுமாம். முக்கிய புள்ளியின் உதவியாளர் ஊரில் உள்ள ஜோதிடர்களை எல்லாம் அழைத்து வந்து விடுவாராம். கிளிஜோதிடம். கைரேகை, வாஸ்து நிபுணர், தொடுகுறி ஜோதிடம், ஓலைச்சுவடி ஜோதிடம், நாடி ஜோதிடம், சோழி ஜோதிடம், திருவிளக்கு ஜோதிடம், எண் கணித ஜோதிடம் என்று அந்த வீட்டிற்குள் நுழையாத ஜோதிடர்களே கிடையாது.
எதிர்வரும் தேர்தலில் எதிரியை வீழ்த்த அலுமினிய பாத்திரம் தானம் செய்யவேண்டும் என்று ஜோதிடர் சொல்லி விட்டதால் சம்பந்தப்பட்ட தொகுதியில் வீட்டுக்கு வீடு குக்கர் வழங்கினாராம் இந்த பெரிய மனிதர்.
இது இப்படி இருக்க, இவரை எதிர்க்கும் அ.தி.மு.க., புள்ளி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 21 புரோகிதர்களை வைத்து,. பல லட்சரூபாய் செலவு செய்து சத்ரு சம்ஹார யாகம் நடத்தினாராம். பின்னர் புரோகிதர்களுக்கு தங்ககாசுகளை கொடுத்தாராம். அதன்பின்னர் தான் ஜெ.பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தன்னை யாராலும் ஜெயிக்க முடியாது என்று பெருமிதத்துடன் கூறினாராம்.
இந்நிலையில் தி.மு.க., வைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ., இந்த முறை தனது வெற்றிக்காக பகீரதபிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளதால் அவரும் ஜோதிடர் வீடுகளாக நுழைந்து வருகிறார். அவரது பரிதாப நிலையை பார்த்து ஒவ்வொரு ஜோதிடரும், ஒவ்வொரு பரிகாரத்தை சொல்லி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிஷேகப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கோயிலில் பசுதானம் செய்தாராம். நெற்றியில் புருவங்கள் இணையும் பகுதியை வெளிப்படையாக காட்டக்கூடாது என்று ஜோதிடர் கூறியதால் தற்போது நெற்றியில் விபூதி, குங்குமம் சகிதமாக வலம் வருகிறாராம் அந்த சிவமயமான எம்.எல்.ஏ. ஆனால், அண்ணா அறிவாலயம் பக்கம் செல்லும் போது மட்டும் விபூதி, குங்குமத்தை கலைத்து விடுகிறாராம்.
வரும் தேர்தலுக்காக அறிவாலயத்தில் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியானது. புதுச்சேரி தி.மு.க.,வினர் அம்மாவாசை தினத்தன்று வேட்புமனு தாக்கல் செய்து ஜோதிடத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. எதாவது கேட்டால் எல்லாமே நம்பிக்கை தான் என்று கூறுகிறார்கள். இவர்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது என்பது உண்மை தான்.
இது ஒரு புறம் இருந்தாலும், ‘நாங்க மட்டும என்ன சும்மாவா?’ என்று கேட்பது போல் முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஜோதிடர் குறித்து கொடுத்த தினத்தில் தனது கட்சி மாநாட்டை நடத்தியுள்ளார். ராகுகாலத்திற்கு முன்னதாக மேடைக்கு வந்து பேசினார். தனது கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்துவிட்டு தான் அவர்களின் செல்வாக்கு பற்றி யோசிக்கிறார்.
ரங்கசாமியிடம் சீட்டு வேண்டும் என்று கேட்பவர்கள் எல்லாம் தங்கள் ஜாதகத்தை கையோடு கொண்டு செல்கின்றனர். ‘எனக்கு சனி உச்சத்தில் இருக்கிறது. குரு வக்கிரத்தில் இருக்கிறது. புதன் து£ரத்தில் இருக்கிறது. சுக்கிரன் எனக்கு பக்கம் தான் என்று கூறி வெற்றி எனக்குத்தான் சீட்டு கொடுங்க!’ என்று நச்சரித்து வருகின்றனர். அவரும் அந்த ஜாதகத்தை கையால் தொடாமல் பார்க்கலாம்.. பார்க்கலாம்.. என்று கூறி நழுவி விடுகிறார்.
இதையெல்லாம் ஒரு படி மீறிவிட்டார் முதல்வர் வைத்திலிங்கம். அவரது காரில் எப்போதும் ஒரு ஜோதிடர் பயணம் செய்கிறார். அவர் ரைட் சொன்னால் தான் கார் திரும்புகிறது என்ற நிலை உள்ளது. தற்போது முதல்வர் வைத்திலிங்கத்திற்கு குருயோகம் சரியில்லையாம். அவர் மிதுனராசி- திருவாதிரை நட்சத்திரக்காரர் என்பதால் நெற்றியில் குருவுக்குரிய நிறமான சந்தனத்தை வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஜோதிடர் அறிவுரை கூறியதால் இப்போது தன் நெற்றியில் சந்தனப்பொட்டோடு வலம் வருகிறார் முதல்வர். கடந்த 6 ந் தேதி தனது காமராஜர் தொகுதியில் சனிமூலையான சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் ஜோதிடர் அறிவுரைப்படி வாக்கு சேகரிக்கத் தொடங்கி விட்டார்.
புதுச்சேரியில் ஜோதிடம், பூஜை, பரிகாரம் என்பது இந்த முக்கிய புள்ளிகளை மட்டும் விட்டுவைக்கவில்லை. இப்படித்தான் புதிய நீதிக்கட்சி பிரமுகர் ஒருவர்,’ நான் அமைச்சராகும் யோகம் இருக்கிறதா?’ என்று ஜோதிடரிடம் கேட்க ஜோதிடருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டதாம்.

No comments: