Wednesday 9 March 2011

புதுச்சேரி தேர்தலில் போட்டியிட சபாநாயகர் மறுப்பு


புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட சபாநாயகர் ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் (கண்ணன் கட்சி) சார்பில் குருவிநத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர் ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 31. எம்.பி.ஏ., பட்டதாரியான இவரது தந்தை முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன் ஆவார். புதிய சிந்தனையோடு அரசியலுக்கு வந்த ராதாகிருஷ்ணனை அப்போதைய முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகள் கவர்ந்தன. ராதாகிருஷ்ணன் புதுவை குடிசை மாற்று தலைவராக ஆனார். குடிசை இல்லா புதுவை என்ற திட்டத்தை கொண்டு வந்து பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பாடுபட்டார். இதன் காரணமாக புதுச்சேரியில் ஏராளமான குடிசை வீடுகள் கல்வீடுகளாக மாறின. ராதாகிருஷ்ணனின் செல்வாக்கு தொகுதி மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் வேகமாக பரவியது. இந்நிலையில் கண்ணன் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்தபோது ராதாகிருஷ்ணன் காங்கிரசில் இணைந்தார்.
இதனிடையே கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது கண்ணன் மீண்டும் காங்கிரஸ் தலைமையுடன் கொண்ட முரண்பாட்டின் காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். ஆனால் அப்போது ராதாகிருஷ்ணன் காங்கிரசிலேயே தங்கிவிட்டார். அந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணனுக்கு சீட் பெற்று தர முதல்வர் ரங்கசாமி தீவிரமாக முயன்றார். ஆனால், முன்னதாக ராதாகிருஷ்ணணை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தியாகராஜனுக்கு சீட் பெற நாராயணசாமி எம்.பி., கடுமையாக முயன்றார். முன்னாள் முதல்வர் சண்முகம் மற்றும் ரங்கசாமி முயற்சியின் பேரில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரசில் சீட் கிடைத்தது.
அப்போது அவரை எதிர்த்து குருவிநத்தம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்த எதிர்கட்சிகள் திக்குமுக்காடின. இறுதிக்கட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளராக முன்னாள் பாண்லே இயக்குநர் நவநீதகண்ணன் களம் இறக்கப்பட்டார். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பல்வேறு சக்திகள் மறைமுகமாக தேர்தல் வேலை செய்தபோதும், மக்கள் அவரை விரும்பினர். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நவநீதகண்ணன் படுதோல்வியடைந்தார். மற்றவர்களின் டெபாசிட் பறிபோனது.
காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ரங்கசாமி முதல்வராக ஆனார். ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி அளிக்காமல் சபாநாயகர் ஆக்கினார்கள். இளம்வயதில் ஒருவரை சபாநாயகர் ஆக்கிவிட்டு அவரது செயல்பாடுகள் முடங்குவதற்கு காங்கிரசில் உள்ள சில சக்திகள் காரணமாக அமைந்தன.
சபாநாயகர் ஆனதும் அவரால் கட்சிப்பணிகளில் நேரடியாக ஈடுபட முடியவில்லை. அவரது தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சீட்டு கேட்ட தியாகராஜனுக்கு நியமன எம்.எல்.ஏ., பதவி தந்தனர். இதன்காரணமாக ராதாகிருஷ்ணனை ஓரம் கட்ட நினைத்தனர். ஆனால் அவர் அசரவில்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல இருக்கின்ற பதவிக்கு அழகு சேர்க்கின்ற வகையில் புதுச்சேரி சட்டசபையின் பொன்விழாவை கொண்டாடினார். இவரது காலத்தில் தான் புதுச்சேரி சட்டசபைக்கு ஜனாதிபதி அப்துல்கலாம், பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் வருகை தந்தனர். சட்டசபையை புதுப்பொலிவாக்கினார். பல காலமாக தினக்கூலிகளாக பணியாற்றியவர்கள் நிரந்தரமாக்கப்பட்டார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் குறைகளை கலைந்தார். தொகுப்பூதியத்தை அதிகப்படுத்தினார்.
தனது குருவிநத்தம் தொகுதியில் உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டில் படுகை அணையை அமைத்துக் கொடுத்தார். இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் கிடைத்தது. மகசூல் பெருகியது. கடலு£ர்- பனையடிக்குப்பத்தை இணைக்கும் பாலத்தை மத்திய அமைச்சர் சிதம்பரத்தை வரவழைத்து திறப்புவிழா கண்டார். இதன் காரணமாக போக்குவரத்து சீரமைந்தது. தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.
இதனிடையே கடந்த 1ந் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசு காரை தனது அலுவலத்தில் எடுத்து வந்து விட்டு, தனது சொந்த காரில் ஏறிச் சென்றவர் இதுவரை எங்கு சென்றார் என்று தெரியவில்லை. சபாநாயகர் அலுவலகமும் பூட்டப்பட்டு உள்ளது. அவரது வீட்டில் விசாரித்தால் வெளியூர் சென்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.
கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து வருகின்றனர். தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியை தேர்வு செய்து மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. அவர் வெளிநாடு சென்று விட்டதாகவும், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் தகவல் பரவியுள்ளது. இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபாநாயகர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப்போவதில்லை. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சபாநாயகரின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், வரும் தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் வழங்கப்பட்டாலும், தியாகராஜனுக்கு நியமன எம்.எல்.ஏ., பதவி தருவார்கள். அவர் எங்கள் தொகுதியில் எங்களை ஓரங்கட்டி விட்டு அரசியல் செய்வார். எங்குமே இந்த நிலை ஏற்படாது. எங்கள் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகருக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ., கோஷ்டி வளர்ப்பார். இது என்ன நியாயம். நாங்கள் தேர்தலில் மக்களை சந்தித்து படாதபாடு பட்டு வெற்றி பெறுவோம். ஆனால் கட்சியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஒருவர் நியமன எம்.எல்.ஏ., பதவி பெறுவதா? இந்த முறை எங்களுக்கு தேர்தல் அரசியல் தேவையில்லை. அவரே நிற்கட்டும். நாங்கள் நியமன எம்.எல்.ஏ., பதவியை பெற்றுக் கொள்கிறோம் என்றார்.
என்.ஆர்.காங்கிரசில் சபாநாயகர் சேருவரா என்று கேட்டதற்கு, நியாயமாக பார்த்தால் நாங்கள் ரங்கசாமி பக்கம் தான் நிற்கவேண்டும். ஆனால் காங்கிரசை விட்டு நாங்கள் ஏன் போக வேண்டும். காங்கிரசில் வெற்றி பெற்றோம். காங்கிரசுக்கு புகழைத்தான் சேர்த்திருக்கிறோம். விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம் என்றார்.

No comments: