Friday 31 December 2010

ஆட்டம் தொடங்கியாச்சி!







புதுச்சேரியில் காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ரங்கசாமி தனிக்கட்சித் தொடங்குகிறார். அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்.
புதுவை மாநிலத்தில் 7 ஆண்டுகள் முதல்வராக இருந்து பெருந்தலைவர் காமராஜரின் அடிச்சுவற்றை பின்பற்றி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய ரங்கசாமி அமைச்சரவை சகாக்களின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில் கடந்த 2008ம் ஆண்டு தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதை தொடர்ந்து புதிய முதல்வராக வைத்திலிங்கம் பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர் ரங்கசாமி கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் ரங்கசாமி தனி கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மேலும் அவர்கள் தனியாக கூட்டம் நடத்தி ரங்கசாமி தனி கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றி அதனை அவரிடம் வழங்கினர். இந்த நிலையில் தை பிறந்த உடன் ரங்கசாமி தனி கட்சி பற்றி முடிவை அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் ரங்கசாமி கட்சியை விட்டு வெளியேறி விடக்கூடாது என்று தீவிரமாக முயற்சி எடுத்து வந்தது. ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை சட்டசபைக்கு வந்த ரங்கசாமி, சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசம் அறைக்கு சென்று அவரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை கொடுத்தார். இதனை சட்டசபை செயலாளர் சிவபிரகாசம் உறுதி செய்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் தனது அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து கட்சித்தலைவருக்கு கடிதத்தை கொடுத்தனுப்பினார். அவரைத் தொடர்ந்து அரசு கொறடா அங்காளன் எம்.எல்.ஏ., வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த பின்னர் ரங்கசாமி, சித்தானந்தா கோயிலுக்குச் சென்றார். அங்கு அ.தி.மு.க., மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., அம்மா பேரவை செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., ஆகியோர் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து கூறினர். மதசார்பற்ற அணியில் சேருமாறு கோரிக்கை விடுத்தனர்.
ரங்கசாமி விலகல் குறித்து அ.தி.மு.க., மாநிலச்செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ரங்கசாமி காங்கிரசில் இருந்து விலகியதை வரவேற்கிறேன். ஊழல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி து£க்கி எறியப்பட வேண்டுமானால் ரங்கசாமி எங்களோடு இணையவேண்டும். எங்கள் அம்மாவின் அனுமதியோடு ரங்கசாமியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைய நாங்கள் பாடுபடுவோம். தமிழகத்தில் ஊழல் தி.மு.க., ஆட்சிக்கு மாற்றாக எங்கள் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. அதுபோல் புதுச்சேரியிலும் அ.தி.மு.க., அமைக்கும் கூட்டணி தான் வெற்றிக்கூட்டணி என்பது உறுதியாகி விட்டது.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
இதனிடையே புதுச்சேரியில் ரங்கசாமி புதிய கட்சி தொடங்குவதை பதிவு செய்ய ஓய்வுபெற்ற அரசு ஊழியர் குழு ஒன்று டெல்லியில் முகாமிட்டுள்ளது. புதுச்சேரி காமராஜ் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி பதிவு செய்யப்படுமென கூறப்படுகிறது. வரும் 7 ந்தேதி முறைப்படி கட்சி தொடங்கப்படும். பின்னர் மக்களை நோக்கி பாதயாத்திரை செல்ல ரங்கசாமி முடிவெடுத்துள்ளார். தேர்தலில் ரங்கசாமி கட்சி அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது. கட்சி தொடங்கிய உடன் சென்னை செல்லும் ரங்கசாமி அங்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கிறார். ம.தி.மு.க, தே.மு.தி.க.., கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்து தேர்தல் வியூகம் அமைக்க உள்ளார்.

No comments: