Thursday, 16 June 2011

புதுச்சேரியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றினார்:




புதுச்சேரியில் முதியோருக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து முதல்&அமைச்சராக பொறுப்பேற்ற ரங்கசாமி முதலாவதாக 3 திட்டங்களில் கையெழுத்திட்டார்.
முன்னதாக அவரது என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை ரூ. 750-ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நேற்று மாலை இந்திராநகர் தொகுதி திலாசுப்பேட்டையில் உள்ள மந்தைவெளி திடலில் நடந்தது. இந்த விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சந்திரகாசு, ராஜவேலு, பன்னீர் செல்வம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், டி.பி.ஆர். செல்வம், நேரு என்கிற குப்புசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 51 கோடி கூடுதல் செலவாகும்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை முழுவதுமாக 100அடி ரோட்டில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு தற்போது 800 பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கும் திட்டம் வருகிற ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்படும்.
இதில் மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு 15 கிலோ அரிசியும், சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 25 கிலோ அரிசியும், பரம ஏழை மக்களுக்கு 35 கிலோ அரிசியும் வழங்கப்படும். அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கவுன்சில் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்டவாறு ரங்கசாமி கூறினார்.

No comments: