Tuesday 23 December 2008

புதுச்சேரியில் போலீசாரால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு

புதுச்சேரி கோர்ட்டில் போராட்டம் நடத்திய விவகாரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 2 ஊர்க்காவல் படை வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் லஞ்சம் வாங்கியபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு லஞ்சம் கொடுத்ததாக வக்கீல் அம்பலவாணன் என்பரையும் சி.பி.ஐ.யினர் பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுச்சேரி தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா வக்கீல் அம்பலவாணனுக்கு ஜாமீன் வழங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்காததால் போலீசார் கோர்ட்டு வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்நிலையங்களில் பணியில் இருந்த போலீசாரையும் வாக்கி டாக்கி மூலம் அழைத்து போராட்டத்தில் ஈடுபட செய்தனர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும் போலீசாரின் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ரோடியர் மில்லின் மேலாண் இயக்குனரான தேவநீதிதாஸ் விசாரணை நடத்துவார் என்று அரசு அறிவித்தது. அவருக்கு மாஜிஸ்திரேட்டுக்கு உரிய அதிகாரமும் வழங்கப்பட்டது. கோர்ட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி ஐகோர்ட்டுக்கு புகார் தெரிவித்தார். கோர்ட்டு அவமதிப்பு வழக்காக ஐகோர்ட்டு இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது. கோர்ட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக வருகிற 5-ந்தேதிக்குள் அறிக்கை தருமாறு புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு இந்த பிரச்சினையில் தலையிட்டதை தொடர்ந்து புதுச்சேரி போலீஸ் வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஐகோர்ட்டின் கண்டனத்தை தொடர்ந்து நேற்று இரவு போலீஸ் உயரதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி.வாசுதேவராவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அகர்வால், ஸ்ரீகாந்த் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கோர்ட்டு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் மற்றும் போட்டாக்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ் (வில்லியனூர்), ராஜ்குமார் (சிக்மா செக்யூரிட்டி) மற்றும் 8போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் நடத்திய வன்முறையில் காயம் அடைந்த 3 கேமிராமேன்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் முதல்வர் வைத்திலிங்கம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

1 comment:

அமலசிங் said...

Hi

I want to contact you regarding bringing Puduchery related issues up.

My email id is: amalasingh at gmail dot com. Please let me know your gtalk id or yahoo messenger id so that we can talk.